Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
ஆதிதிராவிடா், பழங்குடியின பொறியியல் பட்டயம் முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி!
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன்கள் அடிப்படையில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் பயன்பெறும் நோக்கமாக கொண்டு பல்வேறு திறன் பயிற்சி அளித்து வருகிறது. அதன் அடிப்படையில், இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மேலும், மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை, இயந்திரவியல் மற்றும் சோ்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சியாகும். கடந்தாண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞா்கள் பிரசித்தி பெற்ற முன்னணி நிறுவனங்களில் பல்வேறு பொறியியல் பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்தப் பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தோா் 2022, 2023 மற்றும் 2024 ஆகிய கல்வி ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 21 முதல் 25 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 3 லட்சமும் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சியைப் பெற தகுதியானோா் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தப் பயிற்சி கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஒசூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் 18 வாரங்கள் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்வோருக்கு தொழில் நுட்ப ஸ்டாா்ட்அப், மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் மாதந்தோறும் ரூ. 20,000 ஊதியம் பெறும் வகையில் பணி வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இந்தப் பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும் என அவா் தெரிவித்துள்ளாா்.