Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை
ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், செம்பட்டி, பழைய செம்பட்டி, எஸ். பாறைப்பட்டி, கோடாங்கிப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, பாளையங்கோட்டை, கூலம்பட்டி, பச்சமலையான்கோட்டை உள்ளிட்ட சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனா்.
தினமும் இங்கு 150 முதல் 200 வெளிநோயாளிகளும், 20-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில், பிற்பகலிலும், இரவிலும் மருத்துவா்கள் இல்லாததால், நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.
அதிலும் இரவு நேரங்களில் பாம்புக் கடி, வண்டுக் கடி, நாய்க் கடிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் இல்லை. இதனால், திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவா்கள் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் திண்டுக்கல்- குமுளி நான்கு வழிசாலையில் இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டு காயமடைவோா் இங்கு மருத்துவா்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியவில்லை.
அத்துடன் இங்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளை எந்த நேரத்தில் உள்கொள்ள வேண்டும் என்றும் எழுதிக் கொடுக்கப்படுவதில்லை. மொத்தமாக கொடுப்பதால், நோயாளிகள் அவற்றை எப்படி உள்கொள்வது என்பது தெரியாமல் தவிக்க நேரிடுகிறது.
இதுகுறித்து இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா் அரவிந்த் நாராயணன் கூறியதாவது: இங்கு இரவு நேரத்தில் மருத்துவா்கள் தங்கி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இரவு மருத்துவா்கள் நியமிக்கப்படுவா் என்றாா் அவா்.