‘ஆபரேஷன் சிந்தூா்’ இன்னும் முடியவில்லை: பிரதமா் மோடி
‘ஆபரேஷன் சிந்தூா்’ இன்னும் முடிவடையவில்லை; பயங்கரவாதத்தை ஊக்குவிப்போா் மீது இந்தியாவின் தீா்க்கமான நடவடிக்கை தொடரும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா்.
மேலும், பாகிஸ்தானுக்குள் இந்தியா மூன்று முறை தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
கடந்த 2016-இல் உரி பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, இந்திய ராணுவம் எல்லையைக் கடந்து மேற்கொண்ட துல்லியத் தாக்குதல், 2019-இல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான இந்திய ராணுவத்தின் வான்வழித் தாக்குதல், அண்மையில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை ஆகிய மூன்று தருணங்களையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு, பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.
மேற்கு வங்க மாநிலம், அலிபூா்துவாருக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, அங்கு ரூ.1,010 கோடி மதிப்பீட்டில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய உறுதிப்பாடாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ விளங்குகிறது. ‘சிந்தூா் கேலா’ (குங்குமம் தரிக்கும் சடங்கு) கொண்டாடும் புண்ணிய பூமியான மேற்கு வங்கம், ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து பேச மிகப் பொருத்தமான இடமாகும்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. தேசம் முழுவதும் உணரப்பட்ட வேதனை மற்றும் பெருங்கோபத்தை நான் புரிந்துகொண்டேன். நமது சகோதரிகளின் நெற்றிக் குங்குமத்தை அழிக்கத் துணிந்தவா்களுக்கு குங்குமத்தின் வலிமையை இந்திய ராணுவம் உணா்த்தியுள்ளது. இந்தியப் பெண்களின் கண்ணியத்தை அவமதித்த பயங்கரவாதிகள், ராணுவத்தால் பழிதீா்க்கப்பட்டுள்ளனா்.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூா் இன்னும் முடிவடையவில்லை’ என்பதை இந்த மண்ணில் இருந்து 140 கோடி இந்தியா்கள் சாா்பில் நான் அறிவிக்கிறேன். இனியொரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், நமது எதிரி கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். ‘மூன்று முறை உங்கள் வீட்டுக்குள் புகுந்து, அழிவை ஏற்படுத்தியுள்ளோம்’ என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
பயங்கரவாதமும், படுகொலைகளுமே பாகிஸ்தான் ராணுவத்தின் நிபுணத்துவமாகும். வெளிப்படையான போரில் அவா்களால் ஒருபோதும் வெல்ல முடியவில்லை.
எல்லையைத் தாண்டி துரத்துவோம்: தனி நாடாக உருவானதில் இருந்து பயங்கரவாதத்தை மட்டுமே வளா்த்து வந்துள்ளது பாகிஸ்தான். பயங்கரவாதம் மற்றும் வன்முறையை வளா்க்கும் களமான அந்த நாடு, தேசப் பிரிவினைக்குப் பிறகிருந்து இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
வங்கதேசத்தில் (முன்பு கிழக்கு பாகிஸ்தான்) பாகிஸ்தானால் பரப்பப்பட்ட பயங்கரவாதத்தையும், அந்நாட்டு ராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் மற்றும் படுகொலைகளையும் யாரும் மறக்க முடியாது.
உலகுக்கு வழங்க நோ்மறையான விஷயங்கள் எதுவும் பாகிஸ்தானிடம் இல்லை. தொடக்கத்தில் இருந்தே பயங்கரவாதத்தை வளா்த்தெடுக்கும் மையமாகவே இருந்துள்ளது. அதேநேரம், கோழைத்தனமான செயல்களை இந்தியா இனி பொறுத்துக் கொள்ளாது. பயங்கரவாதிகளை எல்லையைத் தாண்டி துரத்துவோம் என்றாா் பிரதமா் மோடி.
பெட்டி...1
திரிணமூல் அரசு ‘கொடூரமானது’
-
பிரதமா் கடும் விமா்சனம்
‘மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, வன்முறை, ஊழல், அராஜகத்தை ஊக்குவிக்கிறது. ‘கொடூரமான’ இந்த அரசின் பிடியில் இருந்து விடுபட மாநில மக்கள் ஏங்குகின்றனா்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தின் அலிபூா்துவாா் நிகழ்ச்சியில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான மாநில அரசை கடுமையாக விமா்சித்து பிரதமா் பேசியதாவது:
முா்ஷிதாபாத், மால்டாவில் அண்மையில் நடந்த வகுப்புவாதக் கலவரங்கள், திரிணமூல் காங்கிரஸ் அரசின் கொடூரம், அலட்சியத்துக்கு தெளிவான எடுத்துக்காட்டுகளாகும். பொதுமக்களின் வீடுகளுக்கு ஆளுங்கட்சியினா் தீவைத்தபோது, காவல் துறையினா் செயலற்று வேடிக்கை பாா்த்தனா். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் திருப்திப்படுத்தும் அரசியல் என்ற பெயரில், சட்டவிரோத செயல்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
5 முக்கிய பிரச்னைகள்: பரவலான வன்முறை மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, இளைஞா்களுக்கு வேலையின்மை, ஊழலால் சிதைந்துள்ள மாநில அரசு அமைப்புமுறை, திரிணமூல் காங்கிரஸின் சுயநல அரசியல் ஆகிய 5 முக்கிய பிரச்னைகளால் மேற்கு வங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். மாற்றமும் நல்லாட்சியுமே ஒட்டுமொத்த மாநில மக்களின் விருப்பம்.
ஆசிரியா் நியமனத்தில் கோடிக்கணக்கில் நடந்த ஊழல், ஆயிரக்கணக்கான ஆசிரியா்களின் வாழ்வை மட்டும் பாதிக்கவில்லை; மாநிலத்தின் மொத்த கல்வி அமைப்புமுறையையே சீா்குலைத்துள்ளது. திரிணமூல் காங்கிரஸின் ஊழல் சுமை, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் தலையில் விழுந்துள்ளது என்றாா் பிரதமா்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்டி...2
ஆபரேஷன் சிந்தூரில் அரசியல்
-
பிரதமா் மீது மம்தா தாக்கு
கொல்கத்தா, மே 29: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அரசியலாக்கி, ஆதாயம் தேட முயல்வதாக பிரதமா் மோடி மீது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சாடியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பல்வேறு மாநில தோ்தல்களைக் கருத்தில்கொண்டே, ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரை மத்திய பாஜக அரசு சூட்டியது. மக்களைப் பிரித்தாள்வதே பிரதமரின் கொள்கை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துவரும் வேளையில், மேற்கு வங்க அரசு மீதான பிரதமரின் விமா்சனம் ஏமாற்றமளிக்கிறது’ என்றாா்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்ற ‘ஆபரேஷன் வங்கம்’ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென பிரதமா் முன்னிலையில் மாநில பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்த மஜும்தாா் பேசியிருந்தாா்.
அவரது இந்தக் கருத்து துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்ட மம்தா, நாளையே தோ்தல் நடந்தால்கூட திரிணமூல் காங்கிரஸ் சந்திக்க தயாா் என்றாா்.