பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!
பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர் பிரசார நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், இந்த பிரசார நடைப்பயணத்தின்போது, வீடுவீடாகச் சென்று பெண்களுக்கு குங்குமம் வழங்கவும் பாஜகவினர் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.
கட்சியிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், குங்குமம் வழங்கும் திட்டம் முறையானதல்ல என்று பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், வீடுவீடாகச் சென்று பெண்களுக்கு பாஜகவினர் குங்குமம் வழங்கவிருப்பதாக பரவும் செய்திகள் வெறும் வதந்தி மட்டுமே. அதில் உண்மைத்தன்மை எதுவுமில்லை என்று பாஜக தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு அவர்களின் கணவர் மட்டுமே குங்குமம் அளிக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் அளிப்பது என்பது குங்குமத்துக்கான மரியாதைக்குரியதாக இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதனிடையே, பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய திரிணமூல் காங்கிரஸ் மமதா பானர்ஜி கூறுகையில், கணவரிடமிருந்துதான் பெண்கள் குங்குமத்தைப் பெறுவர். பிரதமர் யாருக்கும் கணவர் அல்லவே. நீங்கள் ஏன் முதலில் உங்கள் மனைவிக்கு குங்குமம் அளிக்கவில்லை என்று விமர்சித்தார்.
இந்த நிலையில், மமதா பானர்ஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் சம்பித் பத்ரா, இதுவரை எந்தவொரு அரசியல்வாதியோ மக்கள் பிரதிநிதியோ பேசாததை, மமதா பானர்ஜி பேசியுள்ளார். அனைத்து பெண்களுக்கும் மோடி கணவரா என்று கேட்டுள்ளார். என்ன பேச்சு இதெல்லாம். அவர் அனைவருக்குமான ஒரு சேவகர் மட்டுமே. அவர் ஒரு தந்தையாகவும் சகோதரராகவும் மட்டுமே இருப்பார் என்று கூறினார்.