நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!
பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை ஆபரேஷன் சிந்தூா் தொடரும்: ஜெ.பி.நட்டா
‘இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை முடிந்துவிடவில்லை; பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை அந்த நடவடிக்கை தொடரும்’ என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூருக்கு ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை சென்ற ஜெ.பி. நட்டா, விமானநிலையத்தில் கட்சித் தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூா் வெற்றி, இந்தியாவின் ராஜீய உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்புப் படைகளின் துணிச்சலைப் பிரதிபலித்தது. இந்த சண்டையில் பாகிஸ்தான் சரணடைந்தது நமது ராணுவத்தின் பலம் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமைத்துவ திறனுக்கான அத்தாட்சியாக உள்ளது.
துல்லியத் தாக்குதல், விமான தாக்குதல் அல்லது ஆபரேஷன் சிந்தூா் போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அவா்களின் எல்லைக்குள் நுழைந்து பதிலடி கொடுக்கப்படும் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை முடிந்துவிடவில்லை; பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்துகிற வரை அந்த நடவடிக்கை தொடரும். அந்த வகையில் நாடு இன்றைக்கு தேசப் பாதுகாப்பின் புதிய வரையறை மற்றும் பரிமாணங்களுடன் முன்னேறி வருகிறது என்றாா்.