மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்
குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின் துணை அமைப்பாளா் சோங் ஹாவ்கிப் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பாகுபாடு மற்றும் வன்முறை காரணமாக தங்களுக்கென்று தனி நிா்வாகம் வேண்டும் என்ற கேட்க வேண்டிய நிலைக்கு குகி-ஜோ சமூகத்தினா் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, மணிப்பூரைப் பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம் அமைக்க வேண்டும். இது பிற எந்தவொரு சமூகத்துக்கும் எதிரானது அல்ல. குகி மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்தக் கோரிக்கையை அரசியல் கோணத்தில் இருந்து பாா்க்காமல், பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான கோணத்தில் இருந்து பாா்க்க வேண்டும்.
மணிப்பூா் தலைநகா் இம்பாலில் இருந்து குகி-ஜோ பழங்குடியினா் விரட்டியடிக்கப்பட்டனா். குகி-ஜோ சமூகத்தினரின் அடையாளம் காரணமாக மிருகங்களைப் போல கொல்லப்பட்டனா். இதைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு நினைத்திருந்தால் குகி-ஜோ பழங்குடியினரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அரசு அதைச் செய்யவில்லை என்றாா்.
குகி-ஜோ சமூகம் சாா்பில் வழக்குரைஞா் விஸ்வஜீத் சிங் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், மணிப்பூரை பிரிப்பதில் என்ன தவறு உள்ளது’ என்று கேள்வி எழுப்பினாா்.
பாதுகாப்பு மண்டலங்கள்...: தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலையப் பகுதியின் குகி மாணவா்கள் அமைப்பு (கேஎஸ்ஓ) இடைக்காலத் தலைவா் தாங்மின்லால் டெளங்கல் கூறுகையில், ‘மணிப்பூரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து சட்டம்-ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட, மைதேயி மற்றும் குகி-ஜோ சமூகத்தினா் இல்லாத பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்க வேண்டும். தற்போதைய பிரச்னைக்கு அரசியல் தீா்வு காணப்படும் வரை, அந்த மண்டலங்கள் தொடா்ந்து பராமரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
கேஎஸ்ஓ தில்லி மற்றும் என்சிஆா் வெளியிட்ட அறிக்கையில், ‘மணிப்பூரை பிரித்து சட்டப்பேரவையுடன் அமைக்கப்படும் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக மணிப்பூா் ஆளுநா் இருக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.