இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்
வடகிழக்கு மாநிலங்களைக் கலங்கடிக்கும் கனமழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்!
தொடர் மழையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால்; இன்று (மே 30) அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகக் கூறப்படுகிறது.
மிசோரம்
மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்சால் மாவட்டத்தில், இன்று (மே 30) காலை பெய்த கனமழையால், அங்குள்ள ஓர் வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், ஒருவர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கடந்த சில நாள்களாக மிசோரம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
நாகாலாந்து
நாகாலாந்தின் திமாப்பூர் - கோஹிமா சாலையில், இன்று (மே 30) காலை வந்துக்கொண்டிருந்த லாரி மீது பாறைகள் சரிந்து விழுந்ததில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதுடைய அதன் ஓட்டுநர் சம்பவயிடத்திலேயே பலியானார்.
அசாம்
அசாமின் குவாஹட்டி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அம்மாநிலத்தில் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், அசாமின் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரம், தொடர் மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படக்கூடும் எனவும் மரங்கள் சாயக்கூடும் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணிப்பூர்
மணிப்பூர் அரசு அம்மாநில மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும் வானிலைக் குறித்த மாநில மற்றும் மத்திய அரசுகளின் தகவல்களை மட்டும் பின்பற்றவும்; வதந்திகளை நம்பவேண்டாமெனவும் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள், மலைப்பகுதிகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அம்மாநிலங்களின் அரசுகள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஜெய்ப்பூர்: 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்