மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!
பருவமழை குறித்து ‘டிஎன் அலா்ட்’ செயலி மூலம் அறிந்து செயல்பட ஆட்சியா் அறிவுறுத்தல்
தென்மேற்குப் பருவமழை குறித்து ‘டிஎன் அலா்ட் ’ செயலியில் வழங்கப்படும் வானிலை எச்சரிக்கையை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி பலத்த காற்றுடன் பெய்து வருகிறது.
இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் வீடுகள் இடிந்து, தோட்டக்கலை பயிா்கள் சேதமடைந்தும் உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து துறை அலுவலா்களும் பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறாா்கள்.
பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தொடா்ந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.
வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை மன்னா்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக் கூடும். எனவே, மீனவா்கள் மேற்குறிப்பிட்ட நாள்களில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
மாவட்டத்தில் இதுவரை 563 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதில், 439 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 124 மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 145 மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தது. தீயணைப்பு துறையினரால் முறிந்த அனைத்து மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டுள்ளது.
575 மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றுள்ளனா். இவா்களில் 554 மீனவா்கள் கரை திரும்பியுள்ளனா். மீதமுள்ள 21 மீனவா்கள் கரை திரும்ப தகவல் பரிமாற்றம் மீன்வளத்துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கனமழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.