4.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology |...
இயக்குநர் ராஜூமுருகன் நேர்காணல்: ‘நாம் எல்லாருக்கும் சொல்ல ஒரு கதை இருக்கிறது!' | Vikatan Play
Vikatan Play-ல் சுவார்ஸ்யமான ஆடியோ புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. அதில் பலவற்றை நீங்கள் கேட்டு ரசித்திருப்பீர்கள். அவற்றுள் முக்கியமான ஒரு புத்தகம் `வட்டியும் முதலும்'. மனிதனுடைய கீழ்மை, மேன்மை, குரோதம் என நுண் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் புத்தகம் முதலில் `ஆனந்த விகடனில்' ஒரு தொடராக வெளிவந்தபோது, அதனை வாசகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
`வட்டியும் முதலும் நூலை' எழுதிய திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ராஜூ முருகன் அண்மையில் Vikatan Play-க்காக RJ ஆனந்திக்கு ஒரு நேர்காணல் கொடுத்துள்ளார். அதன் எழுத்து வடிவம் இது.
உங்களுடைய `வட்டியும் முதலும்' முதலில் விகடனில் தொடராகவும் பிறகு, புத்தகமாகவும் தற்போது விகடன் பிளேவில் ஆடியோ ஃபார்மெட்டிலும் வெளிவந்துள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை வாசகர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெறும் அனுபவம் எப்படி உள்ளது?
வட்டியும் முதலும் புத்தகம் Audio Formatல் Vikatan Playல் வெளிவந்த பிறகு, நிறைய பேர் எனக்கு போன் செய்து பேசினார்கள். இந்த புத்தகம் நிறைய இதயங்களை எனக்கு கொண்டுவந்து சேர்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல எழுத்திற்கு கிடைக்கக்கூடிய மதிப்பையும், அன்பையும் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களை பாதித்த நிறைய விஷயங்களை `வட்டியும் முதலும்' புத்தகத்தில் பதிவு செய்திருந்தீர்கள். முதல் கட்டுரை எழுதும்போது அடுத்தடுத்த கட்டுரைகளில் என்ன எழுதப் போகிறோம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்காது. இருப்பினும் உங்களை பாதித்தது இத்தனை பேரை பாதிக்கும் என்று நீங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தீர்களா?
ஒரு நல்ல கவிதை அதுவே தன்னை எழுதிக் கொள்ளும் என்று சொல்வார்கள். அதுபோலதான் இதுவும் நடந்தது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் வியூகங்களோ அல்லது எதிர்பார்ப்புகளோ இருக்காது. `வட்டியும் முதலும்' தொடர் எழுத தொடங்கும்போது நான் என் வாழ்க்கையில் மிகவும் Down ஆக இருந்த நேரம். என் முதல் படத்தின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. அது என்னை மிகவும் பாதித்திருந்தது. அடுத்து என்ன? என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவந்திருந்த நேரம் அது.
ஒரு பக்கம், தனிப்பட்ட முறையில் நம்மை மீட்டு நாமே அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற ஒரு நிலை. மற்றொரு பக்கம், தொழிலில் இருந்த கஷ்டம். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் நான் நின்று கொண்டிருந்தபோது, கண்ணன் சார் என்னை அழைத்து, `ஒரு தொடர் எழுத வேண்டும். என்று கூறினார்.' என்று கூறினார். அதுவரைக்கும் எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. என்ன எழுதுவது என்று கேட்டபோது, `உன்னுடைய வாழ்க்கையையே நீ ஒரு தொடராக எழுது' என்றார். என் வாழ்க்கையில் எழுத என்ன இருக்கிறது? என்று நான் சிந்தித்தேன். அப்படி எழுதினாலும் எத்தனை வாரத்திற்கு தொடர்ந்து எழுத முடியும் என்றெல்லாம் நான் சிந்தித்தேன்.
என்னைப் போன்ற நபர்களுக்கு தொலைப்பதற்கும் தேடுவதற்கும் நம்மை நாமே மீட்பதற்கும் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அதுதான் கலை. கலையில் தான் என்னையே நான் தேடுவேன். முதலில் இந்த தொடர் எழுதும்போது, ஒரு 20 வாரங்களுக்கு இது வரக்கூடும்' கண்ணன் சாரிடம் சொன்னேன். எழுத எழுத நம் வாழ்க்கை என்பது நம்முடையது மட்டுமல்ல, எல்லோரும் சேர்ந்ததுதான் நம் வாழ்க்கை என்று புரிந்தது.
திரைப்பட இயக்குநர் மார்ட்டின் கார்சஸி, “உலகத்தில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். அப்படியென்றால், 700 கோடி கதை உள்ளது. 700 கோடி Screen Play உள்ளது” என்று கூறுவார். `வட்டியும் முதலும்' அப்டித்தான். அது என்னுடைய வாழ்க்கையில் இருந்து தொடங்கி, உங்கள் வாழ்க்கையில் பயணித்து, அப்படியே டிராவல் செய்தது. கிட்டத்தட்ட 82 வாரங்கள் தொடர்ந்து அந்த தொடர் வெளியானது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவாகவே நடந்தது''
வட்டியும் முதலும் Audio Formatஆக கேட்க
`வட்டியும் முதலும்' புத்தகத்தில் நிறைய பேருடைய கதைகளை நீங்கள் எழுதி இருந்தீர்கள். அப்படி நீங்கள் சந்தித்த interestingஆன ஒரு நபர் என்றால் யாரைச் சொல்வீர்கள்?
``எல்லோருக்குமே சொல்வதற்கென்று ஒரு கதை இருக்கிறது. நீங்கள் ஒரு எழுத்தாளராக மாறினால் 82 வாரத்திற்கு மேலாக ஒரு தொடரை எழுத முடியும்' ஆனால், தற்போது சாதித்தவர்களுடைய கதையைத்தான் பேச வேண்டும் என்ற ஒரு பிம்பத்தை நாம் கட்டமைத்து வைத்துள்ளோம். அதன் விளைவு, எல்லோரும் சிறு குழந்தைகளிடம்கூட, `வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். சாதிக்க வேண்டும்' என்று தொடர்ந்து அழுத்தத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். என்னுடைய கேள்வி, `ஏன் சாதிக்க வேண்டும்?' என்பதுதான். சக மனிதர்களை ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஏன் அழுத்தம் கொடுக்கிறோம் என்று எனக்ந்த் தெரியவில்லை.
மனிதன் என்பவன் வாழ்க்கையை வாழ வேண்டும். வாழ்வதுதான் முக்கியமே தவிர, சாதிக்க வேண்டும் என்பது இல்லை. இயற்கை நமக்கு அழகான ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறது. அந்த வாழ்க்கையின் அழகான தருணங்களை நாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். நம் பிள்ளைகளை அதற்குத்தான் பழக்கப்படுத்த வேண்டுமே தவிர, ஜெயிக்க வேண்டும் என்ற பிரஷருக்கு ஆளாக்கக் கூடாது. அதைத்தான் வட்டியும் முதலும் நூலில் முக்கியமாக தெளிவுபடுத்தி இருந்தேன். நமக்கு தெரியாத மனிதர்களிடம் அற்புதமான கதைகள் இருக்கின்றன. சாமானியர்கள் ஒரு மேன்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.''
வட்டியும் முதலும் Audio Formatஆக கேட்க

`வட்டியும் முதலும்' என்ற நூல் எழுதிய பிறகு உங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன. உங்களைப் பற்றிய புரிதல் எப்படி இருந்தது?
``என்னைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் என்னிடம் கிடையாது. என் வாழ்க்கையில் இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தாழ்வு மனப்பான்மையும், எதையுமே சரியாக செய்யவில்லை என்ற எண்ணமும், சக மனிதர்களுக்கு பெரிதாக நாம் என்ன செய்துவிட்டோம் என்ற கேள்வியும் எனக்குள்ளே இருந்துகொண்டே இருக்கிறது.''
`வட்டியும் முதலும்' நூல் படித்துவிட்டு உங்களுக்கு வந்த கடிதங்களில் மிகவும் நெருக்கமான கடிதமாக எதைச் சொல்வீர்கள்?
``ஒரு நாள் எனக்கு தீவிர காய்ச்சல். கோடம்பாக்கத்தில் எனக்கு தெரிந்த மருத்துவரை சந்திக்கச் சென்றிருந்தேன். சிறிய அளவிலான ரிசப்ஷன், அங்கே ஒரு மீன் தொட்டி இருந்தது. 15 -20 பேர் அமர்ந்திருந்தார்கள். அப்படியான நெருக்கடியான சூழ்நிலையில் நான் அமர்ந்திருக்கிறேன். அப்போது எனக்கு ஒரு போன் கால் தொடர்ந்து மூன்றுமுறை வந்தது. இரண்டு முறை கட் செய்த நான், மூன்றாவது முறை மருத்துவமனையை விட்டு வெளியே அட்டெர்ன் செய்தேன். போனில் பேசிவர், `நான் மகேந்திரன் பேசுகிறேன்' என்றார். `எந்த மகேந்திரன்?' என்று நான் கேட்டேன். `டைரக்டர் மகேந்திரன் பேசுகிறேன்' என்றார். எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். நான் அவருடைய `உதிரி பூக்கள்' திரைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். `உதிரி பூக்கள்' போன்ற உணர்வுபூர்வமான திரைப்படத்தை வெகுஜன சினிமாவாக எடுத்துள்ளார் என்பது எனக்கு எப்போதும் ஆச்சர்யம்.
`வட்டியும் முதலும்' நீங்கள்தானே எழுதினீர்கள். இப்போதுதான் அந்தப் புத்தகத்தை படித்து முடித்தேன். படித்து முடித்த உடனே உங்களுக்கு போன் செய்ய வேண்டும் என்று தோன்றியது' என்று என்றார். என்னிடம் மிகவும் சாதாரணமாக பேசினார். `எப்படி உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு மனிதர்களை சந்தித்தீர்கள்?' என்று அவர் ஆச்சர்யமாகக் கேட்டார். நான் பார்த்த வியந்த ஒரு மனிதர் என்னை பாராட்டியது பெரிய விஷயமாகத் தெரிந்தது.
வேலூரில் லிங்கம் என்ற தோழர் இருக்கிறார். அவர் ஒரு என்சைக்லோபீடியா என்றுதான் சொல்வேன். மிகப்பெரிய லைப்ரரி அவர். அவர் `வட்டியும் முதலும்' மூலமாகத்தான் அவர் எனக்கு அறிமுகமானார். ஒவ்வொரு வாரமும் `வட்டியும் முதலும்' வெளிவந்ததும் படித்துவிட்டு மறுநாள் காலையில் அவர் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார். கடைக் கோடியில் இருக்கக் கூடிய மனிதர்களும் எனக்கு போன் செய்து அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். இந்த வாரம் இதனை எழுதுங்கள் இது எல்லாம் எங்கள் ஊரில் நடந்தது என்று சொல்வார்கள். இப்படி சகலவிதமான மனிதர்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது `வட்டியும் முதலும்' தான்.
வட்டியும் முதலும் Audio Formatஆக கேட்க
நீங்கள் எழுதியதை படித்தபோது இதனை எல்லாம் நானும் கடந்து வந்திருக்கிறேன் என்று நான் உணர்ந்தேன். ஆனால், நாம் ஏன் இதையெல்லாம் கவனிக்கவில்லை என்று உணர்ந்தேன். இதையெல்லம் எல்லாம் உங்களை கவனிக்க வைத்தது எது?
``என்னுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதை எனக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில், மார்க்கெட்டிங் வேலை, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களில் லேபர் வேலை என நான் 30-க்கும் மேற்பட்ட வேலைகளை பார்த்திருக்கிறேன். இப்படி நான் வேலை பார்த்த இடத்தில், எனக்கு நிறைய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் எல்லோரும் இணைந்துதான் வட்டியும் முதலும் எழுதினார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய குடும்பம் திராவிட இயக்கம் பின்புலம் உள்ள குடும்பம். ஆனால், எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்தே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கு காரணம், என் அண்ணன்கள் சரவணன் மற்றும் யுகபாரதிதான். அவர்கள்தான் எனக்கு இலக்கியத்தையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் அறிமுகப்படுத்தினார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக் கூடிய தோழர்கள் எப்போதுமே எளிமையாகத்தான் இருப்பார்கள். அவர்களால்தான் வாழ்க்கைப் பற்றிய புரிதல்களை எனக்கு உருவானது. இன்றைக்கும் என் வாழ்க்கையில் பெரிய எதிர்பார்ப்புகளோ, பதட்டமோ, பணம் குறித்தான சிந்தனைகளோ இல்லாமல் மனதளவில், நான் ஒரு ஜென் நிலையில் இருப்பதற்கு காரணம் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களும் இடதுசாரி தத்துவமும்தான்.
அதன்பிறகு, எனக்கு ரஷ்ய இலக்கியம் அறிமுகமானது. 1940-களில் புதுமைப்பித்தன், பாரதியார் ஏற்படுத்திய விஷயங்களை ரஷ்ய எழுத்தாளர்கள் அவர்கள் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏற்படுத்தியிருந்தார்கள். இதுபோன்ற காரணங்களால் 20 வயதிற்கு உள்ளாகவே எனக்கு வாழ்க்கைப் பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு, விகடனில் பத்திரிக்கையாளராக சேரக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பலவிதமான மனிதர்களை நான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நேரடியாக சி.எம் ஆபிஸுக்கு செல்லலாம், பெரிய நடிகரை சந்திக்கலாம், பெரிய டைரக்டரை சந்திக்கலாம், சாதாரண மீன் வண்டியை தள்ளுபவரை சந்திக்கலாம், டாஸ்மாக்கில் சென்று ஒருவரை பேட்டி எடுக்கலாம் என்று இதெல்லாம் எனக்கு புதுவிதமாக இருந்தது.
நான் பார்த்த வேலைகள், லிட்ரேச்சர், கம்யூனிஸ்ட் இயக்கம், விகடன், சினிமா என வெவ்வேறு துறைகளில் நான் பயணித்ததால் யாரையும் நானாகத் தேடிச்செல்ல வேண்டிய சூழல் இல்லை. ஒரு உலகம் என்னை தேடி வந்து என்னை சுற்றிச் வந்தது.''
வட்டியும் முதலும் Audio Formatஆக கேட்க
இந்தக் காலகட்டத்தில் புத்தக வாசிப்பு என்பது முந்தைய அளவில் இல்லை. கொஞ்சம் குறைகிறது என்ற வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. `விகடன் பிளே' மூலமாக ஆடியோ புத்தகங்கள் கேட்டு அறிந்துகொள்கிறார்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள். புதிதாக படிக்கத் தொடங்கியவர்கள் ஏன் இலக்கியம் படிக்க வேண்டும்?''
``மாணவர்களும், இளைஞர்களும் இணைந்துதான் எதை வேண்டுமானாலும் தொடங்க முடியும். நான் கலந்துகொள்ளும் கல்லூரி நிகழ்ச்சிகளில், அவர்களுக்கு திரும்பத் திரும்ப இரண்டு விஷயங்களைச் சொல்வேன். ஒன்று வாசிப்பு, மற்றொன்று பயணம் செய்வது. வாசிப்பு என்பதும் ஒரு பயணம்தான் அது நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும். வாசிப்பு என்பது நம்மை மிகவும் பக்குவப்படுத்தும் எனவே வாசிப்பை நிறுத்தாதீர்கள் என்று சொல்வேன். ஆனால், வாசிப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டேதான் வருகிறது.
அதற்கான ஆர்வம் குறைகிற நேரத்தில் இப்படி விகடனில் ஆடியோ வடிவில் புத்தகங்கள் வருவது மிகவும் நல்ல விஷயம். நாம் காரில் சென்று கொண்டிருக்கும்போது கூட கண்ணதாசன் சொன்னதையோ அல்லது ஜெயகாந்தன் கதையையோ ஆடியோவாக கேட்கலாம். அந்த நேரத்தை ஆடியோ புக்குகள் நமக்கு ஒரு சிறந்த அனுபவமாக மாற்றும்.
இன்றையக்கு நாம் எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரெஸ் ஆகிறோம். ஒரு மணி நேரத்தில் நாம் ஆயிரம் ரீல்ஸ்களை பார்க்கிறோம். நம் மண்டைக்குள் ஏதேதோ விஷயங்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. மற்றவர்கள் நம்மை ஏதோ ஒருவகையில் இன்ஃப்ளூயன்ஸ் செய்துகொண்டே இருக்கிறார்கள். இப்படி ஒரு சமூகம் உருவாவது அபத்தமாக இருக்கிறது. உலகம் நல்லது கெட்டது என்ற இரு விஷயங்களுக்குள்ளேதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. கெட்ட விஷயங்களை ஒதுக்கி நம் மனதை பியூரிஃபை செய்து கொள்வதற்கும், நம்மை விசாலமாக மாற்றிக் கொள்வதற்கும் வாசிப்பதும், பயணம் செய்வதும் மிகவும் முக்கியம்.
வட்டியும் முதலும் Audio Formatஆக கேட்க
சிறு வயதில் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் எவை? அவற்றால் உங்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்?
என்னுடைய வாசிப்பு பழக்கம் தொடங்கியது ராணி காமிக்ஸ் புத்தகத்திலிருந்துதான். வாசிப்பு என்பது அவர்களுடைய வயதுக்கு ஏற்புவும், நினைவுகளுக்கு ஏற்பவும் மிக எளிமையாக உருவாக வேண்டும். என் அண்ணன் சரவணன் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்துக்கொண்டிருந்தார். அவர் தமிழ் படித்ததனால் அவருக்கு வாசிப்பு பழக்கம் இருந்தது. நான் காமிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும்போது கல்கியில் வைரமுத்து எழுதிய, `சிகரங்களை நோக்கி' என்ற ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. அதுதான் நான் படிக்கத் தொடங்கிய முதல் இலக்கியம். எளிமையான தமிழில் இருந்த அந்தத் தொடர் எனக்கு படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டியது.
அதன் பிறகு, ஜெயகாந்தனுடைய `யாருக்காக அழுதான்' என்ற கதையைப் படித்தேன். ஜெயகாந்தனுடைய படைப்புகளை படித்துக் கொண்டிருக்கும்போது, சுஜாதா அறிமுகமானார். அவர் எல்லாவற்றையும் மிகவும் சுருக்கமாக விவரிப்பார். நாம் இரண்டு பக்கங்கள் படித்த சிலாகித்த விஷயங்களை அவர் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டு நகர்வார். ஒருவருடைய வாழ்க்கையை எப்படி சுவாரசியமாக எழுதுவது என்பதை சுஜாதா மூலமாகத்தான் நான் அறிந்துகொண்டேன். அதன் பிறகு, அசோகமித்திரன் எனக்கு அறிமுகமானார். அவர் படைப்புகள் ஒரு ஆழ் கடலாக இருந்தது. என்றைக்கும் என்னை மிகவும் ரசிகரிக்க கூடிய ஒரு எழுத்தாளர் அசோகமித்திரன்தான்.
அதன் பிறகு, சுந்தர ராமசாமியுடைய புளிய மரத்து கதைகள், ஏ ஜே சி குறிப்புகள், வண்ணதாசன், அழகிய பெரியவன், சோ தர்மன், செல்வராஜ் தோழருடைய `தோல்' என்ற நூல் போன்றவை எனக்கு அறிமுகமானது. இவையெல்லாம் அறிமுகமானபோது, மக்களுடைய சமூக நெருக்கடி ஒடுக்கப்பட்டவர்களுடைய வலி இதெல்லாம் எனக்குப் புரிந்தது. ஒடுக்கப்பட்ட தலித் மக்களுடைய வாழ்க்கையை வெளியில் எடுத்து வரக்கூடிய பெரிய ரைடிங் ஃபார்ம் எனக்கு அறிமுகம் ஆனது. எப்போதுமே நான் எழுத்தை ஒரு கலையாகத்தான் பார்க்கிறேன்.''
வட்டியும் முதலும் Audio Formatஆக கேட்க
இலக்கியத்தையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க வேண்டிய கலையை நாம் அறிய வேண்டும். அதை தற்போது உள்ள மக்களுக்கு நீங்கள் எவ்வாறு சொல்வீர்கள்?
இந்த சமூகத்தில் ஒரே நாளில் ஒருவரை ஹீரோவாகவும், ஒரே நாளில் ஒருவரை வில்லனாகவும் மாற்றுவதுதான் தற்போது உள்ள மிகப்பெரிய சிக்கல். இதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இல்லை. சுஜாதா “வரும் காலங்களில் அரை மணி நேரத்தில் ப்ராப்ளங்கள் உருவாகும்” என்று எழுதி இருந்தார். இந்த உலகத்தில் அம்மா என்பவர் எப்பொழுதுமே அம்மாதான். அப்பா என்பவர் எப்பொழுதுமே அப்பாதான். எப்படி அதனை நாம் மாற்ற இயலாதோ அதை போலவே அன்பு, அறம் போன்றவை எப்போதுமே மாறாது.
உலகத்தில் எப்போதுமே யாராவது புரளி பேசிக்கொண்டே இருப்பார்கள். இவரா இவர் இப்படித்தான் என்று அவருக்கு ஒரு முத்திரை குத்திப் பேசுவார்கள். அதனையெல்லாம் நாம் கண்டுக்கொள்ளக் கூடாது. ஒரு ஆர்ட்டிஸ்ட் அதனை எல்லாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நம் வேலையை பார்க்கும்போதுதான் ஒரு நல்ல இலக்கியமும் படைப்பும் நமக்கு கிடைக்கும்.!
வட்டியும் முதலும் Audio Formatஆக கேட்க
(தொடரும்)