பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து
ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர்கள்!
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துவைத்துள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 42 மீனவர்களையும் அவர்களின் 8 விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மீனவர்கள் இன்று (மார்ச் 2) கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மீனவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியை மேற்கோள்வதாக உறுதியளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரத்தில் மீன்பிடிக்கச் சென்ற 42 மீனவர்களையும் அவர்களின் எட்டு விசைப்படகுகளையும், இலங்கை கடற்படைத்தனர் சிறை பிடித்தனர்.
மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கச்சி மடத்தில் மூன்றாவது நாளாக மீனவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, இலங்கை அரசு சிறைபிடித்துள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ சங்கத்தினர் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், மத்திய அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் உறுதியளித்தார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?