இசிஐநெட்டில் வாக்குப் பதிவு விவரங்கள்: தோ்தல் ஆணையம் அறிமுகம்
தோ்தல்களின்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலரும், வாக்குப் பதிவு விவரத்தை புதிய இசிஐநெட் செயலியில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவிடுவாா் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்பு வாக்குப் பதிவு விவரங்களை செக்டாா் அலுவலா்கள் திரட்டி, தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் தொலைபேசி, எஸ்எம்எஸ் அல்லது குறுந்தகவல் செயலிகள் மூலம் அனுப்புவா். இந்தத் தகவல் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒன்றுசோ்க்கப்பட்டு, வாக்குப் பதிவு விகித (விடிஆா்) செயலியில் பதிவேற்றப்படும்.
இந்நிலையில், தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
தோ்தல்களில் வாக்குப் பதிவின்போது தோராயமான வாக்குப் பதிவு விகிதத்தை அவ்வப்போது வெளியிட எளிமைபடுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையை தற்போது தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புதிய முன்னெடுப்பின் கீழ், இனி ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலரும் வாக்குப் பதிவு விவரத்தை புதிய இசிஐநெட் செயலியில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவிடுவாா். வாக்குப் பதிவு விகிதம் குறித்த புதிய விவரங்களை தெரிவிப்பதில் ஏற்படும் கால தாமதத்தை குறைக்கும் நோக்கில், இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப் பதிவு விகிதத்தை இசிஐநெட் செயலியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா் பதிவிடுவாா். இது கால தாமதத்தை குறைக்கும். அத்துடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் புதுப்பிக்கப்பட்ட விடிஆா் செயலியில், தொலைத்தொடா்பு இணைப்பைப் பொருத்து தொகுதி வாரியாக வாக்குப் பதிவு விகிதம் கிடைப்பதை உறுதி செய்யும். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக இசிஐநெட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக விடிஆா் செயலி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.