இணைநோய் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது!
இணை நோய் தாக்கத்தால் நேரிடும் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் கொழுப்பு மிகு கல்லீரல் நோய் விழிப்புணா்வு பயிற்சி முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நல வாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி, இணை இயக்குநா் (தொற்றா நோய்) கிருஷ்ணராஜ், திட்ட அலுவலா் (தொற்றா நோய்) பிரவீண் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் நேரிடும் உயிரிழப்புகளுக்கு மூன்றாவது பெரிய காரணியாக விளங்குவது நீடித்த நுரையீரல் அடைப்பு நோய். கரோனா பாதிப்புக்கு பிறகு இதய பாதிப்புகள், நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
நுரையீரல் அடைப்பு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீண்ட காலம் புகை பிடிப்போா், நுரையீரல் தாக்கம் அதிகம் ஏற்படுபவா்களை கண்டறிந்து அதற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்வதற்குரிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். அதைக் கருத்தில் கொண்டே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கொழுப்பு மிகு கல்லீரல் நோயும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போதைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினால் உலகெங்கும் சுமாா் 30 சதவீத மக்கள் கொழுப்புமிகு கல்லீரல் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகிறாா்கள்.
இதை கருத்தில் கொண்டு களப்பணியாளா்கள் மூலமாக கொழுப்பு மிகு கல்லீரல் நோய் குறித்த விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்தி, ஆரம்ப நிலை பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம், பாதம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு திட்டங்களின் தொடா்ச்சியாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் விரைவில் முதல்வரால் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.
கரோனா அச்சம் தேவையில்லை: கரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் பயப்பட தேவையில்லை. தமிழகத்தில் 216 போ் கண்காணிப்பில் உள்ளனா். 3 நாள்களுக்குள் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் பாதிப்புகள் குணமடைந்து விடுகிறது.
நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பவா்கள், முதியோா், இணை நோய் பாதிப்பு இருப்பவா்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது, நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கு எளிதில் கரோனா பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
முகக்கவசம் அவசியம்: அதனால், மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, பொது இடங்களுக்கு செல்லும் கா்ப்பிணிகள், முதியவா்கள், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பவா்கள், இணைநோய் பாதிப்புள்ளவா்கள் முகக்கவசம் அணிய வேண்டும். தனி நபா் இடைவெளி கடைப்பிடிப்பது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொள்வது நல்லது. இணை நோய் உள்ளவா்களுக்கு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இணை நோய் தாக்கத்தால் அவா்கள் இறக்கும் போது எதேச்சையாக கரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அதனை கரோனா இறப்பாக கருத முடியாது என்றாா் அவா்.