இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் திலீப் மற்றும் உதவிப் பணியாளர் சோஹம் தேசாய் ஆகியோரின் மூன்றாண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட பார்டர் - காவஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் விமர்சனத்துக்குள்ளாகினர்.
மேலும், பயிற்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அபிஷேக் நாயரை பொறுப்பில் இருந்து நீக்க பிசிசிஐ முன்வந்ததாக கூறப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயரை இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 8 மாதங்களே ஆகிறது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பிய பிடிஐ செய்தி நிறுவனத்திடம், பதவி நீக்கத்தை அவர் மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை.
மேலும், விரைவில் முடிவுகள் உறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜூன் மாதம் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியுடன், புதிய பயிற்சியாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.