பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் ஐபிஎல் சென்னை, பெங்களூரு அணிகளுக்கு விளையாடியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் சரியாக சோபிக்காத கேதர் ஜாதவ், கடந்தாண்டு அனைத்துவிதமான போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்த நிலையில், மும்பையில் மகாராஷ்டிர அமைச்சரும் பாஜக தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இதுபற்றி ஜாதவ் கூறுகையில், “சத்ரபதி சிவாஜிக்கு தலைவணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் தலைமையில் பாஜக சிறப்பாக செயல்படுகிறது. அதனால், பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார்.
2014 முதல் 2020 வரை இந்திய அணியில் விளையாடிய 39 வயதான கேதர் ஜாதவ், 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், 2015 ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். 2020 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாடியது அவருக்கு கடைசிப் போட்டியாகும்.
அவர் விளையாடிய ஆறு ஆண்டுகளில் 73 ஒருநாள் போட்டிகளில் 1389 ரன்கள் மற்றும் 27 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டிகளில் 122 ரன்களும் குவித்துள்ளார். மேலும், 2018 ஆசியக் கோப்பை, 2019 ஒருநாள் உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி அணிகளிலும் இடம்பெற்றிருந்தார்.
இதற்கு முன்னதாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கௌதம் கம்பீர், இர்பான் பதான், முகமது அசாரூதின், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோரின் வரிசையில் கேதர் ஜாதவ்வும் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிக்க: 27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி! பந்து தாக்கியதில் நிலைகுலைந்தவர்!