ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனையுடன் ஜப்பான் தூதர் சந்திப்பு!
இந்தியாவிற்கு வருகைத் தந்துள்ள ஜப்பான் நாட்டுத் தூதர் பிகார் மாநிலத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனையை நேரில் சந்தித்துள்ளார்.
இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள ஜப்பான் நாட்டுத் தூதர் கெய்ச்சி ஒனொ, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவில் பணியாற்றிய வீராங்கனை ஆஷா சஹாய் சவுதரி (வயது 97) என்பவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜப்பான் தூதர் கெய்ச்சி ஓனொ, ஜப்பானில் பிறந்து நேதாஜியின் வழியில் இந்தியாவின் சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜான்சி ரானி படைப்பிரிவைச் சேர்ந்த திருமதி ஆஷா சஹாய் சவுதரியைச் சந்திக்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்தது எனக் கூறியுள்ளார்.
மேலும், அவரது தாய்நாட்டின் மீதான பக்தியை தான் மிகவும் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 1928-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் பிறந்த ஆஷாவின் தந்தை ஆனந்த் மோஹன் சஹாய், நேதாஜியின் தலைமையில் இயங்கிய ஆசாத் ஹிந்து எனும் நாடு கடத்தப்பட்ட அரசின் அமைச்சராக பணியாற்றினார்.
தனது 15 ஆம் வயதில் நேதாஜியைச் சந்தித்த ஆஷா 1945-ம் ஆண்டு அவரது ராணுவத்தின் ஜான்சி படைப்பிரிவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, பாங்காக் நகரத்தில் ராணுவப் பயிற்சி பெற்ற அவர் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபோது சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 1946-ம் ஆண்டு விடுதலையாகி அவர் தனது தந்தையிடம் சேர்க்கப்பட்டார்.