இந்தியா - பாக். போட்டிக்கு மீண்டும் நடுவராகும் பைகிராஃப்ட்; இந்த முறை சூர்யகுமார் கை குலுக்குவாரா?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட் மீண்டும் நடுவராக செயல்படவுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் இந்திய அணி அதன் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் சுண்டப்படும்போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. இந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் போட்டியின் நடுவரான ஆண்டி பைகிராஃப்டை நீக்கக் கோரி ஐசிசிக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பப்பட்டது. பாகிஸ்தானின் கோரிக்கையை இரண்டு முறையும் ஐசிசி நிராகரித்துவிட்டது. மேலும், ஆண்டி பைகிராஃப்ட் போட்டியின் நடுவராக தொடர்வார் எனவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், நாளை (செப்டம்பர் 21) துபையில் நடைபெறும் போட்டியில் மீண்டும் மோதிக்கொள்ள உள்ளன. இந்தப் போட்டியின் நடுவராக ஆண்டி ஃபைகிராஃப்ட் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 சுற்றுக்கான போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட் நடுவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஐசிசி தனது முடிவில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று நடுவரை நீக்கினால் அது தவறான உதாரணமாக அமைந்துவிடும் என ஐசிசி கருதுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காதது மிகப் பெரிய பேசுபொருளான நிலையில், இரண்டு அணிகளும் மீண்டும் மோதிக்கொள்ள உள்ளன.
இந்த முறை சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவார்களா? அல்லது லீக் போட்டியில் நடந்ததே மீண்டும் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Andy Bycroft will once again be the umpire for the Super 4 match between India and Pakistan in the Asia Cup cricket.
இதையும் படிக்க: ஓமனுக்கு எதிராக பேட்டிங் செய்யாத சூர்யகுமார் யாதவ்; ஆதரவளிக்கும் முன்னாள் கேப்டன்!