லக்னௌ பந்துவீச்சு: ஷர்துல் தாக்குர் நீக்கம், மும்பை அணியில் 2 மாற்றங்கள்!
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த கெளஸ்துப் கன்போட்டே, சந்தோஷ் ஜக்டலே ஆகியோரும் கொல்லப்பட்டனா்.
அவா்களின் குடும்பத்தினரை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானிகள் விரைவில் கண்டறியப்படுவா். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் அனுமதியின்றி நீண்ட நாள்களாக தங்கியிருக்கும் பாகிஸ்தானிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.
பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட், பஹல்காமில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடா்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிகள் குறித்த காலத்துக்குள் வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில முதல்வரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.