நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி
தமிழ்நாட்டில் லிச்சிப்பழம் சாகுபடி: பிரதமர் மோடி பெருமிதம்!
தமிழ்நாட்டில் லிச்சிப்பழம் சாகுபடி செய்யப்படுவதாக, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பிரமிதம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி, ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று(ஏப். 27) நடைபெற்ற 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது,
”பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், நாட்டின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள்.
உலகம் முழுவதும், தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய போரிலே, 140 கோடி நாட்டு மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும், கண்டிப்பாக கிடைத்தே தீரும் என்று நான் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நம்பிக்கை அளிக்கிறேன். இந்தத் தாக்குதலைச் செய்தவர்களுக்கும், இந்த வஞ்சகச் செயலைத் திட்டமிட்டுக் கொடுத்தவர்களுக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.
கடந்த மாதம், மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றிய பயங்கரமான படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், நிலநடுக்கத்தால் அங்கே மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கிறது, விமானப்படையின் விமானங்கள் தொடங்கி, கடற்படையின் கப்பல்கள் வரை மியான்மாருக்கு உதவிகள் புரிவதற்கென்றே புறப்பட்டுச் சென்றன. நமது குழுவினர் கம்பளிகள், கூடாரங்கள், உறங்குவதற்கான பைகள், மருந்துகள், உணவுப் பொருள்கள், குடிநீர் போன்றவற்றோடுகூட, மேலும் பல பொருள்களை அளித்தனர். நமது குழுவினருக்கு அந்த நாட்டு மக்களிடமிருந்து அதிக பாராட்டுக்களும் கிடைத்தன.
லிச்சிப் பழம் பிகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்டில்தான் விளையும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் லிச்சிப் பழ சாகுபடி, தற்போது தென்னிந்தியா மற்றும் ராஜஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் திரு வீர அரசு காபிப்பயிர் விவசாயம் செய்து வந்தார். அவர் கொடைக்கானலில் லிச்சி மரங்களை நட்டார், அவருடைய ஏழாண்டுக்கால உழைப்பிற்குப் பிறகு தற்போது, இந்த மரங்களால் மகசூல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
லிச்சிப் பழங்களைப் பயிர் செய்வதில் இவருக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து, மற்ற விவசாயிகளும் உத்வேகம் அடைந்தார்கள். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் ராணாவத்தும் லிச்சிப் பழங்களைப் பயிர் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் உத்வேகம் அளிக்கவல்லவை. நாம் புதியதாக ஒன்றைச் செய்யும் நோக்கத்தை மேற்கொண்டால், இடர்களைத் தாண்டியும் உறுதிப்பாட்டோடு நின்றால், சாத்தியமற்றதைக் கூட சாத்தியமாக்க முடியும்.” என்றார்.
இதையும் படிக்க: எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்