MI vs LSG: "எல்லோருக்கும் மேட்ச் க்ளிக் ஆகிறது..!" - வெற்றி குறித்து ஹர்திக் மகிழ்ச்சி
ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி, 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து தோல்வியடைந்தது.

வெற்றிக்குப் பின்னர் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, "எங்களுடைய இன்டென்ட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். எல்லோருக்கும் மேட்ச் க்ளிக் ஆகிறது. எங்களுக்கான இந்தச் சூழலை குழந்தைகள்தான் உருவாக்கினர் (ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மூலம் 19,000 சிறுவர், சிறுமிகள் இப்போட்டியைக் காண அழைத்துவரப்பட்டிருந்தனர்). அவர்களுக்காக நாங்கள் வென்றோம். எனவே மிகவும் மகிழ்ச்சி.

ஒவ்வொருவரும் தங்களின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். போஷ் உள்ளே வந்து அந்த சிக்ஸரை அடித்து விதம் அனைவரையும் ஈர்த்தது. போஷ் பந்துவீசவும் இன்று சிறந்த வாய்ப்பு. இதுவொரு கடினமான தொடர். நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், அடுத்த போட்டிக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். முன்னேறும் வேகத்தைத் தொடர வேண்டும்." என்று கூறினார்.
இந்தப் போட்டியில் மும்பை அணியில் அறிமுகமான கார்பின் போஷ், பேட்டிங்கில் 20 ரன்கள் அடித்ததோடு, பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி வெறும் 26 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.