திருத்தணி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்!
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே ரூ.15.67 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் உள்ளது. மேலும் திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் திருத்தணி வழியாகத் தான் சென்று வருகின்றன. திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் குறுகிய அளவில் உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நேரிடுகின்றன.
இதை தடுப்பதற்காக திருத்தணி - அரக்கோணம் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 4.5 ஏக்கா் பரப்பில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம், 2021- 22-ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ், ரூ.12.74 கோடியில் நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த, 2022- ம் தொடங்கப்பட்டன.
புதிய பேருந்து நிலையம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு, 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து புதிய பேருந்து நிலையம் பணி துரித வேகத்தில் நடைபெற்றது. சில காரணங்களால் எட்டு மாதங்களுக்கு மேலாக பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, பேருந்து முகப்பு பகுதியில் முருகன் கோயில் கோபுரம் வடிவம் அமைப்பதற்கு, தமிழக அரசு கூடுதலாக, ரூ.2.93 கோடி ஒதுக்கி, நிா்வாக அனுமதியும் வழங்கியது.
கடந்த டிசம்பா் மாதம் நிறுத்தப்பட்ட பேருந்து நிலைய பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் நகா்மன்றத் தலைவா் சரஸ்வதிபூபதி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக நகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், சுற்றுச்சுவா் மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, முகப்பு பகுதியில் முருகன் கோயிலில் உள்ளது போன்று மூன்று கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு கோபுரப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும் ஒரு கோபுரம் மற்றும் விடுப்பட்ட பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.