கோத்தகிரி: குறைமாத குட்டி ஈன்று இறந்து கிடந்த தாய் யானை.. என்ன காரணம்? - குழப்பத்தில் வனத்துறை
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள நட்டக்கல் பகுதியயைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிலர் வழக்கமாக தேயிலை பறிக்கும் பணிக்கு நேற்று காலை சென்றிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் யானை ஒன்று வழக்கத்திற்கு மாறாக படுத்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அருகில் சென்று பார்த்தபோது யானை இறந்து கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளனர். மேலும் இறந்து கிடந்த யானையின் அருகில் குறைமாத யானை குட்டி ஒன்றும் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக எஸ்டேட் மேனேஜரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். எஸ்டேட் நிர்வாகம் மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் களத்திற்கு சென்று யானையின் இறப்பை உறுதி செய்துள்ளனர்.
முதுமலையில் இருந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொண்டுள்ளனர். இறந்த தாய் யானை மற்றும் குறைமாத குட்டியின் உடல் பாகங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சோகம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், "உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 15 முதல் 20 வயது இருக்கலாம். சுமார் 16 வாரம் கர்ப்பமாக இருந்த இந்த பெண் யானை திடீரென குறை மாதத்தில் குட்டியை ஈன்றிருக்கிறது. அந்த இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறது. இறப்புக்கான காரணம் குறித்து எதுவும் புலப்படவில்லை குழப்பமாக இருக்கிறது. வழக்கத்திற்கு மாறான இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளை வைத்தே உண்மை நிலவரத்தை கண்டறிய முடியும்" என்றனர் .