Weekly Horoscope: வார ராசி பலன் 26.10.25 முதல் 1.11.25 | Indha Vaara Rasi Palan ...
"இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்"- தங்கம் தென்னரசு
விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு 181 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1,537 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 40 ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடங்கிய விதை இன்று தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களாக வேரூன்றி நிற்கிறது என்று குறிப்பிட்டார். தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் `உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 60,000 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 75 சதவிகித மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இங்கு பெறப்படும் மனுக்களில் 50 சதவிகிதம் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். தகுதியுள்ள எல்லோரும் பயன்பெற வேண்டும் என்பதால் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் வழங்குவார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களால் அவர்கள் பொருளாதாரம் உயர்வதோடு, சமூக மாற்றமும் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதேபோல், சமூக முன்னேற்றத்தில் மிக உயர்ந்த நிலையில் தமிழகம் இருப்பதற்கும் பெண்கள்தான் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்துகொண்டனர். அரசு விழா என்பதால் ஆட்சியர், அமைச்சர், எம்.எல்.ஏ., அரசு அலுவலர்கள் மட்டுமே விழா மேடையில் இருப்பார்கள்.
ஆனால் இந்த விழாவில் அரசு அலுவலர்களைத் தவிர்த்து திமுக கட்சியினர் அனைவரும் மேடையையும், விழா நடந்த இடத்தையும் முழுவதுமாக ஆக்கிரமித்தனர்.
இதனால் அங்கு இருந்த மகளிர் மேடையில் ஏறி கடன் தொகையை பெறுவதற்கும், மண்டபத்திற்குள் செல்லுவதற்கும் சிரமமாக இருக்கிறது என முணுமுணுத்தனர். அமைச்சரும் அரசு விழா என்பதை மறந்து கட்சி நிர்வாகிகளை வரவேற்றது அங்கிருந்த மகளிரிடையே பேசுபொருளாக இருந்தது.



















