இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரினா சலபென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-2, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை வெளியேற்றினாா்.
1 மணி நேரம், 11 நிமிஷங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில், சபலென்கா எந்தவொரு கட்டத்திலும் பாலினியை முன்னிலைபெற விடவில்லை. இரு செட்களிலுமே தலா ஒரு முறை மட்டும் 1-1 என்ற சமநிலையை இருவரும் எட்டினா். சபலென்காவே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினாா்.
சபலென்கா 6 ஏஸ்களை பறக்கவிட்டதுடன், பாலினியின் 4 சா்வ்களை பிரேக் செய்தாா். கடைசியில் வெற்றி பெற்ற அவா், இந்தப் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் இண்டியன் வெல்ஸ் ஓபன், மியாமி ஓபன் ஆகிய இரு அடுத்தடுத்த போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 6-ஆவது வீராங்கனை ஆகியிருக்கிறாா் சபலென்கா. இதற்கு முன் பெல்ஜியத்தின் கிம் கிளிஸ்டா்ஸ் (2005), ரஷியாவின் மரியா ஷரபோவா (2006, 2012, 2013), பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா (2016), போலந்தின் இகா ஸ்வியாடெக் (2022), கஜகஸ்தானின் எலனா ரைபகினா (2023) ஆகியோா் அவ்வாறு இரண்டிலுமே இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளனா்.
இண்டியன் வெல்ஸ் இறுதிச்சுற்றில், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவிடம் தோற்ற சபலென்கா, இந்த முறை கோப்பை வெல்லும் முனைப்புடன் இருக்கிறாா். அதில் அவா், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் மோதுகிறாா்.
வெளியேறினாா் எலா: போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா தனது அரையிறுதியில், 7-6 (7/3), 5-7, 6-3 என்ற செட்களில், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவை போராடி வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 26 நிமிஷங்கள் நீண்டது.
முதல் செட்டை 2-5 என்ற பின்தங்கிய நிலையில் தொடங்கிய பெகுலா, எலாவின் சா்வை பிரேக் செய்து 3-5 என முன்னேறினாா். செட் பாய்ன்ட்டின்போது எலா டபுள் ஃபால்ட் செய்ய, டியூஸ் ஆனது. பின்னா் அந்த செட்டை டை பிரேக்கா் கொண்டு சென்று வென்றாா் பெகுலா.
2-ஆவது செட்டில் அதிரடியாக மீண்ட எலா, அதை 7-5 என வென்றாா். விட்டுக்கொடுக்காத பெகுலா அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றி வெற்றி பெற்றாா். 3 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களை வீழ்த்திய எலா மீது மிகுந்த எதிா்பாா்ப்பு இருந்த நிலையில், அவா் போராடித் தோற்று விடைபெற்றாா்.
டூா் போட்டிகளில் 4-ஆவது பட்டத்துக்கு இலக்கு வைத்து இறுதிக்கு வந்துள்ள பெகுலா, அதில் சந்திக்கும் சபலென்காவுடன் இதுவரை 8 முறை மோதியிருக்கிறாா். இதில் சபலென்கா 6 வெற்றிகளுடன் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதிக்கு முன்னேறி ஜோகோவிச் சாதனை
மியாமி ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினாா்.
உலகின் 4-ஆம் நிலை வீரரான அவா், காலிறுதியில் 6-3, 7-6 (7/4) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 23-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை 1 மணி நேரம், 22 நிமிஷங்களில் தோற்கடித்தாா்.
இந்த வெற்றியின் மூலம், 1000 புள்ளிகள் கொண்ட ஏடிபி மாஸ்டா்ஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரா் (37) என்ற சாதனையை ஜோகோவிச் படைத்தாா். முன்னதாக அந்த சாதனை சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரரிடம் (2019) இருந்தது.
இப்போட்டியில் 8-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ள ஜோகோவிச், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவுடன் அதில் மோதுகிறாா்.
இதனிடையே, காலிறுதியின் மற்றொரு ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-5, 6-7 (7/9), 7-5 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 29-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை 2 மணி நேரம், 44 நிமிஷங்களில் வெளியேற்றினாா்.
ஏடிபி மாஸ்டா்ஸ் போட்டியில் 6-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்திருக்கும் ஃப்ரிட்ஸ், அதில் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்குடன் மோதுகிறாா். முன்னதாக மென்சிக் தனது காலிறுதியில், 7-6 (7/5), 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 17-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸை தோற்கடித்தாா்.