இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலைக் கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்
திருக்குவளை: நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் விவகாரத்தை கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார் 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடற்கரை ஓரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை, வெள்ளபள்ளம், ஆற்காட்டுதுறை, செருதூர் ஆகிய நான்கு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஐந்து படகுகளில் சென்ற 24 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி பொருட்களை பறித்து சென்றனர்.
குறிப்பாக செருதூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு படங்களில் சென்ற 10 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் நடத்திய தாக்குதல் விவகாரத்தை கண்டித்து அந்த கிராமத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இன்று (மே 4) செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் அதிகமான பைபர் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

ஏற்கனவே மீன்பிடித்தடை காலம் அமலில் இருக்கும் காரணத்தால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாத சூழலில், தற்பொழுது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் பைபர் படகு மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செருதூர் கிராம மீனவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இன்று மனு அளிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், லட்சக்கணக்கான மீன்பிடி உபகரண பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்