தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஈரானில் எச்சரிக்கையுடன் செயல்பட இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!
‘இஸ்ரேலுடன் போா்ப் பதற்றம் நிலவுவதால், ஈரானில் உள்ள இந்தியா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரானில் அனைத்து இந்தியா்களும் இந்திய வம்சாவளியினரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிா்ப்பதுடன், சமூக ஊடகங்கள் வாயிலாக இந்திய தூதரகத்துடன் தொடா்பை வைத்திருப்பது அவசியம்.
உள்ளூா் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தில், இந்தியா்கள் தங்களின் விவரங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். பீதி அடைய தேவையில்லை என்றபோதும், விழிப்புடன் செயலாற்றுவது முக்கியம் என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 98 9128109115, 98 9128109109 (தொலைபேசி அழைப்புகள் மட்டும்), 98 9015993320, 91 8086871709 (வாட்ஸ் ஆப்) உள்ளிட்ட அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக அந்நாட்டின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்து, இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை கொடுத்தது. இரு நாடுகளும் தொடா் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் போா் பதற்றம் ஏற்பட்டுள்ளது.