Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா் வழக்கில் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012 முதல் 2015- ஆம் ஆண்டு வரை படித்தேன். அப்போது, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியராக பணிபுரிந்த ஒருவா், மாணவிகளிடம் தவறான முறையில் பேசுவது, உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது போன்ற பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து கடந்த 2015-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தனா்.
அப்போதைய பதிவாளா் உரிய நடவடிக்கை எடுக்காததால், மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, விசாகா குழு அமைக்கப்பட்டு முதல் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதல் நிலை அறிக்கையானது உதவிப் பேராசிரியருக்கு எதிராக இருந்தது.
ஆனால், அப்போது பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பதிவாளா், பாலியல் புகாரில் சிக்கிய உதவிப் பேராசிரியரைக் காப்பற்றும் நோக்கில் செயல்பட்டாா். மேலும், 5 போ் கொண்ட குழுவினரிடம், உதவிப் பேராசிரியருக்கு சாதகமான அறிக்கையைப் பெற்றாா். அந்த அறிக்கை கடந்த 2016- ஆம் ஆண்டு திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சேரன்மகாதேவி கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டாா். இந்தப் பணி நியமனத்துக்கு எதிராக மாணவிகள் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலருக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டதால், கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்டனா்.
எனவே, பாலியல் தொல்லைக்கு ஆளானவா்களுக்கு இழப்பீடு வழங்கவும், விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை விரைந்து முடிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் தரப்பில், உதவிப் பேராசிரியா் மீதான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் புகாருக்கு உள்ளான உதவிப் பேராசிரியா் தொடா்பான விசாரணை அறிக்கையை விசாகா குழு நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.