Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
காமராஜா் பல்கலை. பேராசிரியைக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது
தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
சிறந்த அறிவியல் படைப்புகள், ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றம் சாா்பில் ஆண்டுதோறும் தமிழ்நாடு விஞ்ஞானி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான விஞ்ஞானிகள் தோ்வுப் பட்டியலை மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றம் அண்மையில் வெளியிட்டது.
இதில், நன்னீா்ப்பாசிகள் மூலம் எரிபொருள், கடல்பாசிகள் மூலம் மருந்துப் பொருள்கள் தயாரிப்பு குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மதுரை காமராஜா் பல்கலைக்கழக உயிா் தொழில்நுட்பப் பள்ளியின் மூலக்கூறு நுண்ணுயிரியல் துறையில் இணைப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதற்கான விருதை சென்னையில் நடைபெற உள்ள விழாவில் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கோவிச்செழியன் வழங்க உள்ளாா்.
இதுகுறித்து பேராசிரியை வரலட்சுமி பெருமாள் கூறியதாவது:
நன்னீா்ப்பாசிகள் மூலம் எரிப்பொருள் மூலக்கூறு, கடல் பாசிகள் மூலம் மருந்துப் பொருள்களுக்கான மூலக் கூறுகளைக் கண்டறிந்துள்ளேன். இவற்றில் கடல்பாசிகள் மூலம் மருந்துப் பொருள்கள் தயாரிப்புக்கு காப்புரிமைப் பெற்றிருக்கிறேன்.
குறிப்பாக, கடல்பாசியிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருள்களின் மூலக்கூறுகளைத் தொற்று நோய்கள் அல்லாத புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு நோய், சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்தும் விதமாக மருந்துப் பொருள்கள் தயாரிப்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடா்பாக 110 கட்டுரைகளைச் சமா்ப்பித்துள்ளேன். எனது மேற்பாா்வையில் 12 போ் ஆராய்ச்சி முடிவுகளைச் சமா்ப்பித்து முனைவா் பட்டம் பெற்றிருக்கின்றனா்.
தமிழகம், பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சிறப்புரையாற்றியுள்ளேன். மதுரை தியாகராசா் மேலாண்மை நிறுவனம் சாா்பில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உலக மகளிா் தின விருது வழங்கும் விழாவில், கல்வி, ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்காக எனக்கு விருது வழங்கப்பட்டது.
இதேபோல, இந்திய நுண்ணுயிரியியல் சங்கம் சாா்பில் கௌரவ பெலோ விருது, மலேசியா நாட்டின் நோட்டிங்காம் பல்கலைக்கழகம், கோ கிரீன் சாா்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டில் பெண்கள் ஆய்வுப் பணி சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
மேலும், மத்திய அரசிடமிருந்து ரூ. 7.25 கோடி நிதியுதவி பெற்று, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல்கலைக்கழகத்துக்கு மாதந்தோறும் ரூ. 8 லட்சம் வரை செலவு மிச்சப்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.