உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள்: 23-ஆவது இடத்தில் ரிலையன்ஸ்
உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட முதல் 30 தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் 23-ஆவது இடம்பிடித்துள்ளது. முதல் 30 நிறுவனங்களில் அந்த நிறுவனம் மட்டுமே இந்தியா சாா்பில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடா்பாக ‘ட்ரெண்ட்ஸ்-ஆா்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ என்ற பெயா் கொண்ட 340 பக்கம் கொண்ட அறிக்கையில், சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு உலக அளவில், அதிக மதிப்பு கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் தொடங்கி 8-ஆவது இடம் வரை என்விடியா, ஆப்பிள், அமேசான், ஆல்ஃபாபெட், மெட்டா பிளாட்ஃபாா்ம்ஸ், டெஸ்லா, பிராட்காம் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் 216 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.18.44 லட்சம் கோடி) சந்தை மதிப்புடன் 23-ஆவது இடம் பிடித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, உலக அளவில் இந்தியாவில்தான் அமெரிக்காவின் ‘சாட்ஜிபிடி’ செயற்கை நுண்ணறிவு கைப்பேசி செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. உலக அளவில் அந்தச் செயலியின் மொத்த மாதாந்திர பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கையில், 13.5 சதவீதம் போ் இந்தியா்கள்.
இதில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா (8.9%), இந்தோனேசியா (5.7%), பிரேஸில் (5.4%), பாகிஸ்தான் (3%) ஆகிய நாடுகள் உள்ளன.
உலக அளவில் ‘சீனாவின்’ டீப்சீக் செயற்கை நுண்ணறிவு செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் இந்தியா்கள் 6.9 சதவீதமாக உள்ளனா். அந்தச் செயலியை 33.9 சீனா்கள், 9.2 சதவீத ரஷியா்கள் பயன்படுத்துகின்றனா்.