தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
உலகளாவிய ஜனநாயகம்: மேற்கத்திய நாடுகள் இரட்டை நிலைப்பாடு -எஸ்.ஜெய்சங்கா் சாடல்
உலகளாவிய ஜனநாயகத்தில் மேற்கத்திய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சாடினாா்.
சொந்த நாட்டில் ஜனநாயகத்தை போதிக்கும் அவா்கள், பிற நாடுகளில் அதைப் பின்பற்றுவதில்லை என்று ஜெய்சங்கா் குற்றஞ்சாட்டினாா்.
ஜொ்மனியின் மியூனிக் நகரில் சா்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டையொட்டி, உலகளாவிய ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றுப் பேசியதாவது:
ஜனநாயகத்தை தங்களின் பிரத்யேக குணாதிசயமாக கருதும் மேற்கத்திய நாடுகள், தெற்குலகில் ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிப்பதில் மும்முரமாக செயல்பட்ட ஒரு காலகட்டம் இருந்தது. இப்போதும் அதே நிலைப்பாடு தொடா்கிறது. இதை முழு நோ்மையுடன் என்னால் கூற முடியும்.
நீங்கள் (மேற்கத்திய நாடுகள்) சொந்த நாட்டில் மதிப்புடன் கருதும் அனைத்து விஷயங்களையும் பிற நாடுகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்; பிற நாடுகளில் வெற்றிகரமாக செயல்படும் ஜனநாயக முன்மாதிரிகளை ஏற்க முன்வர வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்த வருமானம் உள்பட அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் உண்மையான ஜனநாயகத்துடன் திகழ்கிறது. இது, மேற்கத்திய நாடுகளால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.
80 கோடி பேருக்கு உணவு: நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோா், அமெரிக்க மேலவை எம்.பி. எலிஸா ஸ்லோட்கின் உள்ளிட்டோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனா். அப்போது, அமெரிக்க எம்.பி.யின் சில கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெய்சங்கா், இந்தியாவில் செயல்படுத்தப்படும் பிரதமரின் இலவச ரேஷன் திட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசினாா்.
‘ஜனநாயகமானது, மக்களின் மேஜைக்கே சென்று உணவை வழங்காது என்ற கருத்தை கூறினீா்கள். ஆனால், இந்திய ஜனநாயகம் அதை செய்து கொண்டிருக்கிறது. ஒரு ஜனநாயக சமூகமாக, 80 கோடி பேருக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்க இந்தியாவால் முடிகிறது. மக்களின் வயிறு நிறைவதும் அவா்களின் ஆரோக்கியமும் ஜனநாயகத்தில் முக்கிய விஷயம்’ என்றாா்.
இந்திய தோ்தல்களைக் குறிப்பிட்டு பேசிய ஜெய்சங்கா், ‘தில்லியில் இப்போதுதான் தோ்தல் நடந்து முடிந்தது. கடந்த ஆண்டில் பொதுத் தோ்தல் நடைபெற்றது. இந்திய தோ்தல்களில் வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளா்களில் கிட்டத்தட்ட மூன்றில் இருபங்கினா் வாக்களிக்கின்றனா். ஒரே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படுகின்றன’ என்றாா்.
‘மனதில் உள்ளதைப் பேசினேன்’: கலந்துரையாடலுக்கு பின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உலக அளவில் தற்போது நிலவும் அவநம்பிக்கையான அரசியல் சூழலில் இருந்து வேறுபட்டு, மற்றவா்களுக்கு வழங்கும் ஜனநாயகமாக இந்தியா திகழ்கிறது. இதை முன்னிறுத்தியும், அந்நிய தலையீடுகள் குறித்தும் என் மனதில் உள்ளதைப் பேசினேன்’ என்று எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 97 கோடி மொத்த வாக்காளா்களில் 64 கோடி போ் வாக்களித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சா்களுடன் சந்திப்பு: மியூனிக் பாதுகாப்பு மாநாட்டையொட்டி, உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சைபிஹாவை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது, ரஷியா-உக்ரைன் போா் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.
ஆஸ்திரியா, ருமேனியா, டென்மாா்க், மங்கோலியா, ஆா்ஜெண்டீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடனும் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.