“ரன்களையும் தாண்டி...” விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம்: வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத்
புது தில்லி: தேர்ந்தெடுக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு இந்திய கடற்படை வலிமையானது, எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம் என்று கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைரஸ் அட்மிரல் பிரமோத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டை மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்தது குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று (மே 12) பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ. என். பிரமோத் ஆகியோருடன் சேர்ந்து விளக்கமளித்தார்.
இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை இந்திய கடற்படை எவ்வாறு எதிர்கொண்டது என்பது குறித்து வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் பேசுகையில், பல அடுக்குகளும் நுட்பங்களையும் கொண்ட பாதுகாப்பு அமைப்பைத் தயாராக வைத்திருந்தோம். அனைத்து தளங்களில் இருந்தும் வந்த தாக்குதல்களையும் முறியடித்தோம்.
கடற்படை கண்காணிப்புத் தொடர்கிறது. ஆபத்து வந்தால் உடனடியாக கண்டுபிடித்து முறியடிக்கும் ஆற்றலும் உள்ளது. வணிக மற்றும் போர் விமானங்களை அடையாளம் காணும் உயர்தர தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது.
எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம். எதிரியால் நமது அருகே கூட வர முடியவில்லை. தேர்ந்தடுக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கும் அளவுக்கு இந்திய கடற்படை வலிமையானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
இந்த அதிரடித் தாக்குதலுக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இந்த சண்டை சனிக்கிழமை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.