`எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை!' - அதிமுக, பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலை பதில்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென டெல்லிக்கு விசிட் அடித்து, பாஜக-வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து, 45 நிமிடங்கள் உரையாடினார். அப்போது, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைக்கப் போகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் உலாவின.

இருப்பினும், அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பின்னர் டெல்லியிலேயே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைக்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது" என்று கூறியிருந்தார். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்குச் சென்று, அமித் ஷாவை நேரில் சந்தித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணி அமையப் போகிறது என்று பரவிவரும் பேச்சுகள் குறித்து, ``கூட்டணிக்கான தூரம் நிறைய இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. களத்தில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் நலன் முக்கியம். அதைவிட தமிழக மக்களின் நலன் முக்கியம். கூட்டணி சம்பந்தமாகத் தகுந்த நேரத்தில் தலைவர்கள் பேசுவார்கள்.

மாநில தலைவராக என்ன சொல்ல வேண்டுமோ அதைத் தலைவர்களிடத்தில் தெரிவித்திருக்கிறேன். 2026-ல் ஆட்சியிலிருந்து தி.மு.க இறக்கப்பட்ட வேண்டும். எனவே, இப்போதைக்கு கூட்டணியைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், கூட்டணியைப் பற்றி பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சிதான் முதன்மையானது." என்று கூறினார்.