மதுரை: ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு உணவு; அரசு மருத்துவமனை வருபவர்களுக்காகச் சேவை; அசத்தும் அமைப்பு
தென் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையான மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.
அப்படி வருகின்றவர்களுக்குத் தினமும் 3 ஆயிரம் வீதம் கடந்த ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு உணவு, குடிநீர், பழங்கள் வழங்கி அரிய பணியைச் செய்து பாராட்டப்பட்டு வருகிறது நட்சத்திர நண்பர்கள் அமைப்பு.

பல்வேறு துறைகளிலுள்ள தன்னார்வலர்களை இணைத்து தொழில் நிறுவனம் நடத்திவரும் குருசாமி என்பவரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் நட்சத்திர நண்பர்கள் அமைப்பு இந்த சீரிய பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறது.
பல்வேறு சேவை அமைப்புகள் மதுரையில் பல்வேறு தளத்தில் செயல்பட்டாலும் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும், அவர்களுக்குத் துணையாக வருபவர்களும் உணவுக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த 'நட்சத்திர நண்பர்கள்' கடந்த ஆண்டு முதல் உணவு வழங்கத் தொடங்கினார்கள்.
இப்போது தினமும் ராஜாஜி மருத்துவமனை வாசலில் மதியம் 12 மணியிலிருந்து சுவையான உணவு தயாரித்து, பேக்கிங் செய்து சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் தன்னார்வலர்கள் மூலம் உணவுப் பொதிகளை விநியோகம் செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

இதுமட்டுமின்றி மதுரை மாநகருக்குள் செல்லும் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் ஆற்றின் இரு கரைகளிலும் 350-சி.சி.டி.வி கேமராக்களை நிறுவிக் கண்காணித்து வருகின்றனர்.
வைகை ஆற்றில் படர்ந்து நீரோட்டத்தைத் தடுத்து ஆபத்தை உண்டாக்கும் ஆகாயத் தாமரைகளை இயந்திரம் மூலம் அகற்றி வருவதையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சாலை ஓரத்தில் வியாபாரம் செய்பவர்கள், வெய்யில் மழையிலிருந்து காத்துக்கொள்ளப் பெரிய குடைகளை வழங்கியும், வீடின்றி நடைபாதையில் வசிப்பவர்களுக்குப் போர்வை, கம்பளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் அரசுப் பள்ளிகளுக்கு நவீன கழிவறைகளையும் அமைத்துக் கொடுத்து வசதியற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகின்றனர்.
அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
மதுரையில் இந்த பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.
இது குறித்து நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் ஸ்டார் குருசாமி கூறும்போது, "நாங்கள் இப்பணியை விளம்பரத்துக்காகவோ, வேறு நோக்கத்துக்காகவோ செய்யவில்லை.
எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதால்தான் தினமும் உணவு, குடிநீர், பழ வகைகளை வழங்குவது இரண்டாவது ஆண்டாகத் தொடர்கிறது.
இதுவரை நாங்கள் 10 லட்சத்துக்கும் அதிகமாக உணவு, குடிநீர், பழ வகைகளை வழங்கியுள்ளோம். இந்த சேவையில் நாங்கள் மிகுந்த மன நிறைவு அடைகிறோம்.

இந்த சேவையில் நாங்கள் மிகுந்த மன நிறைவு அடைகிறோம். தற்பொழுது கோடைக் காலம் என்பதால் மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் இனி வரும் நூறு நாட்களுக்குத் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்கும் திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம்.
சமூக வலைத்தளங்கள் மூலம் எங்களது உண்மையான சேவை உலகெங்கிலும் சென்றடைந்துள்ளது. பசி என்பது ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கு வருவதாகும். அந்த பசியைப் போக்குவதற்காகத்தான் நாங்கள் மழை, வெயில், குளிர் பாராது அனைத்து நாட்களிலும் சுகாதாரமான சுவையான உணவு, குடிநீர், பழங்களை மக்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
உணவு கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக் கூடாது, அவர்களுக்கு உணவளிப்பதே எங்களது இலக்கு எனச் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs