நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்
நமது நிருபர்
வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உடனடி கேள்வி நேரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை:
பொதுமக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் மறு அடமானம் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள் வழிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள விதிகளின்படி, நகைக் கடன் காலத்தின் முடிவில், கடன் வாங்குபவர் வட்டியை மட்டுமே செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம். புதிய அறிவிப்பின்படி வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைக் கடன்களை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளைத் திருப்ப வேண்டும். அதன்பிறகு மறுநாள்தான் மீண்டும் மறு அடமானம் வைத்து கடன் பெற முடியும்.
இதன் காரணமாக, ஏழை மக்கள், விவசாயிகள் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இது அவர்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
புதிய வழிகாட்டு முறைகளால் விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தில் தனியார், தனிநபர்கள், அடகு தரகர்கள் மற்றும் கமிஷன் முகவர்களிடமிருந்து கடன் வாங்கும் சூழலை உருவாக்குவதுடன் அவர்களுடைய வாழ்வாதாரத்தை சுரண்டவும் வழிவகுத்துவிடும். ஆகவே, இதை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகளும், நடைமுறைகளும் தொடர உறுதி செய்யுமாறு நிதியமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் வைகோ.