எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!
'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்
பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தார்.

விசிகவில் இருந்து சஸ்பெண்ட்
இதையடுத்து அவர் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். தவெகவில் அவருக்கு தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
`எங்கள் குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லை'
தவெகவில் இணைந்த பிறகு ஆதவ் அர்ஜூனா திமுக மீது அதிகளவு விமர்சனம் வைத்து வருகிறார். ஆதவின் அரசியலுக்கு அவரின் குடும்ப உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கெனவே ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, “ஆதவின் அரசியல் நிலைப்பாடு அவரின் தனிப்பட்ட விருப்பம். அதற்கும், எங்கள் குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லை,” என்று கூறியிருந்தார்.

அண்மை காலமாக ஆதவ் அர்ஜூனா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க தொடங்கியுள்ளார். ஆதவ் மற்றும் அண்ணாமலை இடையேயான வார்த்தை போர் தீவிரமடைந்து வருகிறது. “மாமனார் பணத்தில் லாட்டரி விற்று வாழவில்லை.” என்று ஆதவை அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், “அண்ணாமலை மீது ஆதவ் அர்ஜூனா வைக்கும் விமர்சனங்களுக்கு நான் எதிர்ப்பையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாமலை தமிழ்நாட்டின் நலனுக்காக தீவிரமாக உழைத்து வருகிறார். ‘மாமனார் பணத்தை தவறான வழிகளுக்கு பயன்படுத்துகிறார்’ என்ற அவரின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

`முட்டாள்தனமான கருத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை'
என் அப்பாவின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்துக்கும் அவர் அவப்பெயரை உருவாக்கி வருகிறார். தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார தேவைகளை தீர்த்துக்கொள்வதற்காக அவர் பிரசாந்த் கிஷோருடன் கூட்டு சேர்ந்து பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார்.
அவரின் முட்டாள்தனமான கருத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். ஆதவ் அர்ஜூனா இதே நிலையை தொடரும் பட்சத்தில், எங்கள் நன் மதிப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்வேன்.” என்று கூறியுள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“அடுத்தடுத்து தன் சொந்த குடும்ப உறுப்பினர்களே ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் ரீதியாக அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.” என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.