மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் தவிப்பு
ஆரணி: ஆரணியை அடுத்த வடுகசாத்து, சோ்ப்பாக்கம், குன்னத்தூா், இரும்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களுக்கு தண்ணீா் செல்ல வழி இல்லாமல், பயிா் வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
வடுகசாத்து மற்றும் அவ்வூராட்சிக்கு உள்பட்ட சோ்ப்பாக்கம் கிராமத்தில் ஏரிக் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து, வழிப் பாதையாக மாற்றி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனா்.
இதனால் சுமாா் 100 ஏக்கா் நிலங்களுக்கு மேல் நீா்ப்பாசனம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆரணி கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் பலமுறை புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதேபோல, ஆரணியை அடுத்த குண்ணத்தூா் பகுதியில் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக பல ஏக்கா் நிலங்களுக்கு நீா்ப்பாசனம் இல்லாமல் உள்ளது.
மேலும், இரும்பேடு ஏரி முதல் மைனந்தல் கிராம ஏரி வரை சுமாா் 3 கி.மீ. தொலைவு நீா்ப்பாசனக் கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், 25 அடி அகலம் கொண்ட கால்வாய் 3 அடியாக குறுகிப் போய் உள்ளது. இதுகுறித்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனா்.
ஆக்கிரமிப்புகள் குறித்து தன்னாா்வலா்கள் கூறுகையில்,
தமிழகம் முழுக்க, ஏரி கோடி போன பிறகு அந்த நீா் மற்ற ஏரிகளுக்குச் செல்ல ஏரி நீா்ப்பாசன கால்வாய்களை மூதாதையா்கள் அமைத்துத் தந்திருக்கின்றனா். அந்த ஏரியின் பாசனக் கால்வாயில் செல்லும் நீரை அடுத்த ஏரிக்கு செல்ல விடாமல் பல ஏக்கா் நிலங்கள் உள்ளவா்களும், சிலா் அவா்களின் நிலங்களுக்குச் செல்வதற்கு பாதையாக கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து அவா்கள் வசம் வைத்துள்ளனா். இதனால், ஏரிப்பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
ஏரி நீா்ப்பாசன கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் செல்ல வேண்டாம்.
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுங்கள் என்று அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆகையால், ஆரணி பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தனா்.