`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!
கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதாவது, ``மத்திய பட்ஜெட் நாளில் நிதியமைச்சருக்கு, குடியரசு தலைவர் தேனும், தயிரும் கலந்து ஊட்டி விட்டார். நியாயமாகவும், பாராபட்சமாக நடந்துக்கொள்ள கூடாது, சார்பு நிலை எடுக்க கூடாது என்பது தான் இதன் நோக்கம், அர்த்தம். அதன் பிறகு நாடாளுமன்றத்தில் சுமார் 1.15 மணி நேரம் தண்ணீரை குடித்துக்கொண்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். அப்போது, எல்லோரையும் விட பிரதமர் மோடி மேசையை பலமாக தட்டினார்.
ஆரவாரமாக தட்டி வரவேற்கும் விதமாக பட்ஜெட்டில் ஆண்டிற்கு 12 லட்சம் வருமானம் உள்ள நபர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக கூறியுள்ளனர். இந்த வரி விலக்கு மூலம் நாட்டில் உள்ள 140 கோடி பேரில், ஒரு கோடி பேர் மட்டுமே பயன்பெறுவார்கள் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்கள், ஏற்கனவே வரி செலுத்தி வரும் நபர்கள். அதேநேரத்தில் நாடாளுமன்ற தனிக்கை குழுவால் 230 பக்கம் கொண்ட அறிக்கையில், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான வரியை கார்பரேட் நிறுவனங்கள் செலுத்தவில்லை என்றுள்ளனர்.
வருமானவரித்துறை பயங்கரமான துறை, எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டிற்கு எல்லாம் புகுந்து, வரி ஏய்ப்பு எல்லாம் கண்டுபிடித்து அமலாக்கதுறையினரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும். அந்த வருமான வரித்துறை, கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வரியை வசூல் செய்ய முடியவில்லை என கூறுகிறது. பெட்ரோல், டீசல் உயர்வால் அனைத்து அத்தியாவசிய விலையும் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. அன்றாடம் மக்கள் விழித்துக்கொண்டு இருக்கும் போது மட்டுமல்ல, துாங்கும் போதும்கூட வரி செலுத்தி வருகிறார்கள். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து பட்ஜெட்டில் இல்லை.
மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான நிதி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு நுாறு நாட்கள் திட்டத்தில் பணியாற்றும் நபர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. சுமார் ரூ.1,600 கோடி மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியது வரவில்லை. முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் பதில் இல்லை. நாடு முழுவதும் செய்யப்படும் வரி வசூல் மத்திய அரசிடம் வழங்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கு ஏற்பவும், வளர்ச்சி திட்டங்களுக்கும் ஒதுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
ஆனால் மத்திய அரசு எல்லா மக்களிடம் இருந்தும் வரி வசூல் செய்து விட்டு, ஒரு மாநிலத்திற்கு மட்டும், தன்னை ஆதரிப்பவர்களுக்கு மட்டும் நிதியை வழங்குவது ஜனநாயகமும் இல்லை... மரபும் இல்லை. சென்ற ஆண்டு ஆந்திராவுக்கும், பீகாருக்கும் வழங்கப்பட்டது. இந்தாண்டு பீகாருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடியுடன், நித்தீஷ்குமார் முரண்பட்டு நிற்கிறார். எப்போது வேண்டுமானாலும் கூட்டணியில் இருந்து விலகலாம் என்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. வஃக்பு சட்டத்திற்கு நித்தீஷ் குமார் எதிராக உள்ளார். நித்தீஷ்குமார் தன்னை விட்டு போய் விட கூடாது, அடுத்தாண்டு தேர்தல் வருகிறது என்பதற்காக பிரதமர் மோடி பீகாருக்கு நிதியை ஓதுக்கீடு செய்துள்ளார். இது பொதுவான பட்ஜெட் இல்லை. எனவே, பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் பிப்.8ம் தேதி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கூட பெரியாரை ஏற்றுக் கொள்கிறார்கள். பெரியாரை இழிவுப்படுத்தி பேசுவது நம்மை நாமே இழிவுப்படுத்திக்கொள்ளும் செயலாகும். சீமான் கடந்த காலங்களில் பெரியாரை மிக உயர்வாக பேசினார். இன்றைக்கு சீமான் ஏன் இந்த நிலைமைக்கு ஆளாகினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு பின்னால் இருக்கும் நபர்கள், பேசினால் பிரச்னையாகும் என்ற காரணத்திற்காக சீமானை வைத்து பேச வைக்கிறார்கள். சீமானின் நிலை அரசனை நம்பி புருஷனை கை விட்ட நிலைமையாக போகிறது. தமிழர்களுக்காக போராடுகிறேன் என கூறும் சீமான், ஏன் பட்ஜெட் குறித்து வாய் திறக்கவில்லை. இதில் இருந்து யார் அவரை இயக்குகிறார்கள். யாருக்காக அவர் இயங்குகிறார் என்பது தெரிகிறது" என்றார்.