BJP: "விசிகவுக்கு எத்தனை தொகுதி கொடுப்பாங்கன்னு முதல்வர்ட்ட கேப்பீங்களா?" - நயின...
ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சரக்குகளைக் கையாளும் பிரிவில் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 270 பேர் பலியாகினர். இந்த சம்பவமானது, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சரக்குகளைக் கையாளும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
விடியோ பதிவு செய்யப்பட்ட நாள் குறித்து தெளிவாகத் தெரியாவிட்டாலும், விபத்து ஏற்பட்ட சில நாள்களில்தான் விடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், கொண்டாட்டத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
ஏர் இந்தியா ஊழியர்களின் கொண்டாட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், 4 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விடியோ குறித்த வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனம், விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஏர் இந்தியா எப்போதும் துணை நிற்கும். நிறுவனத்தில் கொண்டாட்டம் தொடர்பாக சமீபத்தில் வெளியான விடியோவுக்கு எங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சமயத்தில், இந்த தவறான நடத்தை மூலம் எங்களை மதிப்பிட முடியாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களின் பொறுப்புணர்வு மீதான உறுதிப்பாட்டை மீண்டும் தெளிவுப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க:நன்றியற்ற ஈரான் தலைவர்! டிரம்ப் குற்றச்சாட்டு!