"ஒரு டீல் போடுவோம் வர்த்தகம் செய்வோம் என்றேன்; மோதல் நின்றது" - Ind - Pak மோதல் விவகாரத்தில் ட்ரம்ப்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 9 தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதற்கடுத்த நாள் இரவில் பாகிஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீர் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற, இந்திய ராணுவம் அவற்றைச் சுட்டு வீழ்த்தும் பதில் தாக்குதலில் இறங்கியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகளில் பதற்றம் அதிகரித்தது. அதைத்தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையில் அமெரிக்கா தலையிட, இரு நாடுகளும் மோதல் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மே 10-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அதன்பின்னரே இந்தியா, பாகிஸ்தான் தரப்பிலிருந்து மோதலை நிறுத்த முடிவெடுத்திருப்பாக அறிவிப்புகள் வெளியானது.
இத்தகைய செயலால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், "எதற்காக அமெரிக்கா இதில் தலையிட்டது? மோதல் நிறுத்தத்தை இந்திய பிரதமர் அறிவிக்காமல் எப்படி ட்ரம்ப் அறிவித்தார்?" என்று கேள்வியெழுப்பின.
பின்னர், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றப் போகிறார் என மே 12-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

அடுத்த சில மணிநேரங்களில், "பாகிஸ்தானும் இந்தியாவும் மோதலை நிறுத்தவில்லையெனில் இரு நாடுகளுடனும் வர்த்தகம் கிடையாது என நான் விடுத்த எச்சரிக்கையால்தான், இரு நாடுகளும் உடனே சமாதான ஒப்பந்தத்துக்கு முன்வந்தன" என்று ட்ரம்ப் வெளிப்படையாகப் போட்டுடைத்தார்.
பிறகு, நாட்டு மக்களுக்கான தனது உரையில், ட்ரம்பின் இத்தகைய பேச்சு குறித்து மோடி எந்த விளக்கமும் தரவில்லை. இதுவரையில், மத்திய அரசு தரப்பிலிருந்தும் அமெரிக்காவின் தலையீடு குறித்து எந்த அறிக்கையும் வரவில்லை.
இந்த நிலையில், சவுதி அரேபியா சென்றிருக்கும் ட்ரம்ப், அங்கு நேற்று (மே 13) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், "சமாதானத் தூதராக இருப்பதும், ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்துபவராக இருப்பதும் எனது மிகப்பெரிய நம்பிக்கை. போர் எனக்குப் பிடிக்காது. ISIS-ஐ வீழ்த்த 4-5 ஆண்டுகள் ஆகும் என்று பலர் சொன்னார்கள். ஆனால், 3 வாரங்களில் அதை நான் வீழ்த்தினேன்.

சில நாள்களுக்கு முன்னர், இந்திய - பாகிஸ்தான் இடையே அதிகரித்த மோதலைத் தடுக்க, எனது நிர்வாகம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மோதல் நிறுத்தத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்தது. அதில், வர்த்தகத்தைப் பெருமளவில் நான் பயன்படுத்தினேன். `ஒரு டீல் போடுவோம், சில வர்த்தகம் செய்வோம், அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம்' என்று நான் சொன்னேன். பின்னர் மோதல் எல்லாம் நிறுத்தப்பட்டது. அது அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன்." என்று கூறியிருக்கிறார்.