ஒரே இரவில் அடுத்தடுத்து விபத்துகள்: மகா கும்பமேளா பக்தர்கள் 15 பேர் பலி!
மகா கும்பமேளா தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அடுத்தடுத்து வெவ்வேறான விபத்துகளில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கு சென்று பக்தர்கள் 10 பேருடன் திரும்பிய சுற்றுலா பேருந்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2.15 மணியளவில் இந்தூர் - அகமதாபாத் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும், 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதேபோல், மகா கும்பமேளாவுக்கு சத்தீஸ்கரில் இருந்து பக்தர்கள் சென்ற காரின் மீது பிரயாக்ராஜ் - மிர்சாபூர் நெடுஞ்சாலையில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர்.
மகா கும்பமேளா தரிசனத்துக்கு பக்தர்களுடன் சென்ற பேருந்து, சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் லக்னௌ - ஆக்ரா அதிவிரைவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பவன் சர்மா (33) பலியானார். தீவிபத்தின்போது மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்தைவிட்டு வெளியேறிய நிலையில், தீவிபத்தை அறியாமல் பவன் சர்மா தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறுகின்றனர். அவரது உடல் உடற்கூறாய்வுக்கு காவல் கண்காணிப்பாளர் கூறினார்.