'பிரசாந்த் கிஷோர் தான் வர வேண்டுமா... உங்களுக்கு மூளை இல்லையா?' - சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு தேவை இருக்கிறது. இந்த மக்களுக்காக களத்துக்கு வந்திருக்கிறேன். நான் தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு.
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சைரன் வைத்த வாகனம் வேண்டாம் என்று சொன்னார். வந்த வாகனத்தை திரும்பி போக சொன்னவர் அவர்.
மக்கள் அரசியலில் பாதுகாப்பு தேவையில்லை. தம்பி விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு என்னை மாதிரி இருப்பது சிரமம். என்னைப்போல நின்று பேச முடியாது. அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கி இருப்பார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/0j7syt8h/IMG_20250215_WA0055.jpg)
நாங்கள் ஓட்டு பிச்சை எடுக்கிறோம். அண்ணாமலை என்ன செய்கிறார். அவர்களே வீட்டில் வந்து கொடுக்கிறார்களா.
கட்சி அரசியல், தேர்தல் அரசியலையே வியூக வகுப்பாளர்கள் செய்கின்றனர், அவர்கள் மக்கள் அரசியலை முன்னெடுப்பதில்லை. தேர்தல் வியூக வகுப்பாளர்களால் வெல்வது மட்டும் என்றால்... அது வியாபாரம். மக்கள் அரசியல் எப்போது வரும்.
தவெக தலைவர் விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி என்பவர் வியூக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்,
ஆதவ் அர்ஜுனா என்ற வியூக பொறுப்பாளர் இருக்கிறார்.
இவர்களுக்கு இந்த மண்ணின் சிக்கல்கள் எப்படி தெரியும்.
பீகாரில் இருந்து ஒருத்தர் வரவேண்டும் என்றால் உங்களுக்கெல்லாம் மூளை இல்லையா. தமிழகத்தில் யாருக்கும் மூளை எதுவும் இல்லை என்று நினைக்க மாட்டார்களா?
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-08/de6a4f32-dee4-46be-adad-e152c88260a8/WhatsApp_Image_2019_08_19_at_6_33_58_PM.jpeg)
திருப்பரங்குன்றம், அத்திக்கடவு அவிநாசி பிரச்னை, நொய்யல் பிரச்னை எல்லாம் பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா.
கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்த வரை வியூக வகுப்பாளர்களுக்கு தேவை இருந்ததா.
திமுகவில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டவர்களை விட பிரசாந்த் கிஷோர் போன்றோர் பெரிய ஆளா. இதை தன்மான இழப்பாக பார்க்கிறேன். ஜான் ஆரோக்கியசாமி எங்களுக்கு வேலை செய்யவில்லை. கட்சி கடந்து எங்களுக்குள் ஒரு உறவு இருந்தது, ஒப்பந்தம் போட்டு சம்பளம் கொடுத்து எல்லாம் வேலை செய்யவில்லை. எங்கள் மீதான அக்கறை காரணமாக ஒரு சில முறை ஆலோசனை மட்டுமே சொல்லியிருக்கின்றார். பாண்டே, ரவீந்திரன் துரைசாமி போன்றவர்களும் எங்களுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். வெவ்வேறு கட்சியில் இருப்பவர்களும் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்,
அதெல்லாம் யார் என சொன்னால் பிரச்னையாகிவிடும்." என்றார்.