கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக...
ஒரே நாளில் 47 மீனவர்கள் சிறை பிடிப்பு; இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை- மீனவர்கள் அதிர்ச்சி!
ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்க கடலில் உள்ள பாக் நீரிணை பகுதியே அவர்களின் வாழ்வாதர தளமாக இருந்து வருகிறது. அதை நம்பியே பாக் நீரிணை பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு தமிழக மீனவர்களை குறிவைத்து தங்கள் தாக்குதல்களையும் சிறைபிடிப்புகளையும் தொடர்ந்து வருகின்றனர் இலங்கை கடற்படையினர்.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 339 விசைப்படகுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் வழக்கமாக மீன்பிடிப்பில் ஈடுபடும் பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் ரோந்து கப்பல் மூலம் சுற்றி வளைத்தனர். இதனை கண்ட தமிழக மீனவர்கள் தங்கள் படகுகளுடன் அப்பகுதியில் இருந்து தப்ப முயன்றனர்.


ஆன போதும் இலங்கை கடற்படையினர் தப்ப முயன்ற படகுகளையும் அதில் இருந்த மீனவர்களையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், தங்கச்சிமடம் ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்கு சொந்தமான 4 விசை படகுகளையும் அதில் மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்களையும் சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க சென்று பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒரு விசைப்படகினையும் 17 மீனவர்களையும் இலங்கை கடற்படையின்ர் சிறை பிடித்து சென்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தியும் உள்ளனர். இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 47 மீனவர்களை சிறை பிடித்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கும் இலங்கை அரசு, பிடிபடும் மீனவர்களுக்கும் கோடி கணக்கான ரூபாய் மதிப்பில் அபராதம் விதித்து வருகிறது. இந்த அபராத தொகையினை கட்ட முடியாத மீனவர்கள் ஆண்டு கணக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனால் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினர் தங்கள் உறவுகளையும், வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் இழந்து தவிக்கின்றனர்.
மீனவர்கள் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதும், அவர்களை மீட்டுத்தர கோரி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயலாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மீன் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலவாணியும் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதுடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு தர கோரிக்கை விடுத்துள்ளனர்.