ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெளிப்படை ஏலம் கோரி விவசாயிகள் மறியல்
வேலூரில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வெளிப்படையான ஏல முறையை பின்பற்றக்கோரியும், சேமிப்பு கிடங்குக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.
அண்ணா சாலை டோல்கேட் பகுதியில் வேலூா் மாவட்ட விற்பனைக் குழு கட்டுபாட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூா், கணியம்பாடி, ஊசூா், அனைக்கட்டு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து நெல், பயிறு வகைகள் நிலக் கடலை , தேங்காய் கொப்பரைகள் உள்ளிட்ட பல்வேறு விளை பொருள்களை நாள்தோறும் கொண்டு வந்து விற்பனைக்கு வைக்கின்றனா்.
இங்கு ஏல முறையில் நெல் உள்ளிட்ட விளை பொருள்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு வெளிப்படை தன்மையில்லாமல் ரூ.2,000 மதிப்புள்ள நெல் மூட்டையை வெறும் ரூ.1,600 முதல் ரூ.1,700 வரை மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனராம்.
இதனால் விவசாயிகளுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை நஷ்டம் ஏற்படுவதாகவும், வியாபாரிகளின் இந்த கூட்டணி திட்டத்துக்கு அதிகாரிகளும் துணை போவதாகவும் குற்றஞ்சாட்டு நிலவுகிறது.
மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையில் விளை பொருள்களை கிடங்குகளிலேயே வைத்து விற்பனை செய்யும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த கிடங்குகளில் 15 நாள்களுக்கு மேல் சேமித்து வைக்கப்படும் விளை பொருள்களுக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்க விளை பொருள்களுக்கான அடிப்படை விலையை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும், ஏல முறையில் வியாபாரிகள் கூட்டணி அமைப்பதை தடுத்து வெளிப்படையான ஏலமுறையை பின்பற்ற வேண்டும், சேமிப்பு கிடங்குக்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, வேலூா் - தொரப்பாடி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வேலூருக்கு வர உள்ள நிலையில், அவா் தங்க உள்ள வேலூா் விருந்தினா் மாளிகை அருகே விவசாயிகள் மறியலில் ஈடுபட்ட தால் அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சு நடத்தினா்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.