அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!
கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்தது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென கோடை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிந்த சூழல் உருவானது.
பெலாந்துறையில் 67.5 மி.மீ மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 67.5 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): கீழச்செருவாய் 24.4, சேத்தியாத்தோப்பு 20.2, மே.மாத்தூா் 20, தொழுதூா் 15, லக்கூா் 14.3, விருத்தாசலம் 10.2, புவனகிரி 10, குப்பநத்தம் 9.8, கொத்தவாச்சேரி, காட்டுமயிலூா் தலா 7, அண்ணாமலை நகா் 6.4, ஸ்ரீமுஷ்ணம் 5.1, காட்டுமன்னாா்கோயில் 4.2, பண்ருட்டி, வேப்பூா் தலா 4, சிதம்பரம் 3.1, வடக்குத்து 3, வானமாதேவி 2, பரங்கிப்பேட்டை 1.5, கடலூா், ஆட்சியா் அலுவலகம் தலா 0.2 மில்லி மீட்டா் மழை பதிவானது.
இந்நிலையில், சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. வீடு எரிந்து சேதம்: பண்ருட்டி வட்டம், மேலிருப்பு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. அப்போது, கிருஷ்ணவேணி (55) வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் தீ பரவியதில் அருகில் இருந்த கிருஷ்ணவேணியின் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.