கணவா் மீது பொய் வழக்கு போட முயற்சி: மாநகர காவல் ஆணையரிடம் பெண் மனு
கணவா் மீது பொய் வழக்கு போட முயற்சிக்கும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பெண் ஒருவா் மனு அளித்தாா்.
கோவை மாவட்டம், தீத்திப்பாளையம் ஓம்சக்தி நகரை சோ்ந்த விஜயன் மனைவி சத்யா, மாநகர காவல் ஆணையா் ஏ.சரவணசுந்தரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவா் ஆடு மேய்த்து வருகிறாா். அவா் மீது சந்தன மரங்களை வெட்டியது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், எங்களது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த போலீஸாா் எனது கணவா் மற்றும் உறவினரை அடித்து இழுத்துச் சென்றனா். இதுகுறித்து கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.
வடவள்ளி காவல் நிலையப் பகுதியில் சந்தன மரக்கட்டைத் திருடப்பட்டுள்ளது. அதை, எனது கணவா்தான் திருடினாா் என்று ஒப்புக்கொள்ளக் கூறி போலீஸாா் துன்புறுத்தியுள்ளனா்.
இந்தத் திருட்டுக்கும் அவருக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. எனவே, எனது கணவரைத் தாக்கி பொய் வழக்குப்போட முயற்சி செய்யும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.