கரூர்: `குழந்தைகளைத் தோள்ல வச்சுட்டு வந்தவங்க அப்படியே விழுந்தாங்க!'- சம்பவம் இடத்திலிருந்த ராஜேஷ்
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில், தவெக பரப்புரைக் கூட்டம் நடந்த பகுதியில் இருக்கும் நம் செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ``விஜய் பேசுன இந்த ஸ்பாட்டுக்கு பக்கத்துலதான் எங்க வீடு. மொட்டை மாடியில இருந்து பார்த்தாலே விஜய் பேசுறது தெரியும். நேத்து காலைல 9 மணில இருந்தே கூட்டம் கூட ஆரம்பிச்சிடுச்சு.
முன்னாடியே போனாதான் விஜய்யை பக்கத்துல பார்க்க முடியும்ங்கிற ஆர்வம் எல்லாருக்கும் இருந்ததைப் பார்க்க முடிஞ்சது. மதியம் 12 மணிக்கே ஒரு பொதுக்கூட்டத்துக்கு என்ன கூட்டம் கூடுமோ அது கூடிருச்சு.
அந்த சமயத்துலயே விஜய் வந்துருந்தா இவ்ளோ சேதாரம் ஆகியிருக்காது. லேட் ஆக ஆக கூட்டம் அதிகமாச்சு. கரண்டு கம்பம், டிரான்பார்மர், ஜெனரேட்டர்னு ஆபத்தைப் பத்தி யோசிக்காம எல்லா பக்கமும் ஏற ஆரம்பிச்சாங்க.
கரண்டு கம்பி மேலலாம் ஏறாதீங்கன்னு மைக்ல சொன்னாங்க. அப்பவும் யாரும் கேட்கல. அதுக்கு பிறகுதான் கரண்டை கட் பண்ணினாங்க.
விஜய்யோட பிரசார வாகனம் உள்ள நுழைஞ்சப்போ அதை நோக்கி பெருங்கூட்டம் அப்டியே தள்ளுச்சு. நிறைய பேர் தங்களோட குழந்தைகளை தோள் மேல வச்சு விஜய்யை காண்பிச்சுட்டு இருந்தாங்க.
கூட்டம் தள்ளுனதுல அவங்கெல்லாம் அப்டியே சரிஞ்சு கீழ விழுந்தாங்க. கீழ விழுந்த குழந்தைங்க மிதிபட்டத கண்ணால பார்த்தோம். விஜய் பேசுறப்ப ஒரு பக்கத்துல மயங்குனவங்களுக்கு தண்ணி கொடுத்தாரே. அந்த இடத்துல மட்டும் பலர் செத்துருப்பாங்க. எல்லா பதற்றமும் ஓயுறதுக்கு நைட்டு 12 மணிக்கு மேல ஆச்சு.