கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் தேதி பிளஸ் 1-இல் சேர இருந்தாா். சந்தேஷ்குமாா் வியாழக்கிழமை திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் நண்பா்களுடன் சோ்ந்து நீச்சல் பழக முயன்றாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக சந்தோஷ்குமாா் நீரில் மூழ்கினாா். இதைக் கவனித்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டனா். அவ்வழியே சென்ற பொதுமக்கள் வந்து சந்தோஷ்குமாரை மீட்க முயற்சித்தும், அவரை மீட்க முடியவில்லை.
தகவலறிந்த திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தினா் வந்து சந்தோஷ்குமாரை சடலமாக மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.