தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!
தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறது
தில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மதராஸி கேம்ப் என்று அழைக்கப்படும் குடிசைப்பகுதியாகும். இங்கு சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமாா் 40 முதல் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றன.
இந்த இடத்தை அங்கீகாரமற்ற குடியிருப்புப் பகுதியாக தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இப்பகுதியில் ஏற்படும் வெள்ளம், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னிட்டு, இங்குள்ள குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது, பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையான மறுவாழ்வு அளிப்பதை உறுதி செய்து இந்தக் குடியிருப்புகளை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் இன்று காலை முதல் இந்தப் பகுதியை ஜேசிபி வாகனத்தின் மூலம் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பலத்த காவல் துறை பாதுகாப்புடன் தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்தக் குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தில்லி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), ஜனநாயாக வாலிபா் சங்கம், நாம் தமிழா் கட்சி போன்றவை பல்வேறு போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வயது அடிப்படையில் 3 வகை திரைப்பட தணிக்கைச் சான்று: மத்திய அரசு