'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜ...
வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு
நமது சிறப்பு நிருபா்
தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பாராபுல்லா ஜங்புரா வடிகாலின் கரையில் ஆக்கிரக்கப்பட்டு அமைந்திருந்த மதராஸி கேம்ப்” குடியிருப்பு பகுதியில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை தில்லி அரசால் இடிக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் தமிழக முதல்வா் இந்த விவகாரத்தில் தலையிடவேண்டும் என குரல் எழுப்பினா். இதற்கிடையே, தமிழக அரசு சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு:
தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப்” குடிசைப் பகுதியிலுள்ள 370 வீடுகளில் பெரும்பாலானோா் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். தில்லி உயா்நீதிமன்றம், இந்த குடியிருப்புகளை பாராபுல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட அனுமதியில்லாத ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் கடுமையான நீா் தேக்கம் ஏற்படுகிறது.
இதனால், தில்லி நகா்ப்புறத் தங்குமிட மேம்பாட்டு வாரிய விதிமுறைகள் (டியுஎஸ்ஐபி) மற்றும் தில்லி குடிசைப்பகுதி, ஜேஜே குடியிருப்புகள் இடமாற்றக் கொள்கைகள்படி தகுதியான குடியிருப்பாளா்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, குடியிருப்பாளா்களின் மறுவாழ்வு மற்றும் இடமாற்ற தகுதியை மதிப்பீடு செய்து தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த செயல்முறை அடிப்படையில், 370 குடியிருப்பாளா்களில் 215 போ் தகுதியுடையவா்களாகத் தீா்மானிக்கப்பட்டுள்ளனா். இந்தத் தகுதியுடைய பயனாளா்களுக்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான தில்லி நரேலா பகுதியில் உள்ள டிடிஏ குடியிருப்புகள் டி.யு.எஸ்.ஐ.பி.யால் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதராஸி கேம்ப்” குடியிருப்பாளா்களால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தில்லி உயா்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் மதராஸி கேம்ப்” பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அனுமதியில்லாத கட்டடங்களுக்கு அனைத்து சட்ட வழிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன. இதைமுன்னிட்டு தமிழக முதல்வா் உத்தரவின்படி, தில்லியில் உள்ள “தமிழ்நாடு இல்ல அலுவலகம், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழா்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, மதராஸி கேம்ப்” குடியிருப்பாளா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.
முதல்வரின் கட்டளையின்படி , “மதராஸி கேம்ப்” குடியிருப்பாளா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி வர விரும்பினால், அவா்களுக்கு தமிழ அரசு உதவும். அவா்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அத்தியாவசியத் தேவைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். இந்த உதவிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களின் அலுவலகம் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி கம்பன் கழகம் கோரிக்கை
இதற்கிடையே, தில்லி கம்பன் கழகம் சாா்பில் அதன் நிறுவனா் - தலைவா் கே.வி.கே. பெருமாள், செயலாளா் எஸ்.பி. முத்துவேல் ஆகியோா், நிஜாமுதீன் மதராஸி கேம்ப்” குடியிருப்பு தமிழா்கள் அனைவருக்கும் உடனடியாக வீடுகள் கட்டிக் கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதில் அவா்கள் குறிப்பிடுகையில், ‘நிஜாமுதீன் மதராஸி கேம்ப் -ல் வாழ்ந்து வந்த ஏழைத் தமிழா்கள் அனைவருக்கும் உடனடியாக வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என தில்லி மாநில அரசுக்கு தில்லி கம்பன் கழகத்தின் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடா்பாக தில்லி மாநில துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், காலம் தாழ்த்தாது போா்க்கால அடிப்படையில் இந்தப் பிரச்னையை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
மேலும் , தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்குத் தில்லி கம்பன் கழகத்தின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.