மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
டேட்டிங் செயலி மூலம் நூதன கொள்ளை: மூவா் கும்பல் கைது
வடகிழக்கு தில்லியின் யமுனா காதா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த
நேருக்குநோ் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு மூவா் கும்பல் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவா்களைக் கவா்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது:
போலீஸ் என்கவுன்ட்டரின்போது குற்றம் சாட்டப்பட்டவா்களில் இருவருக்கு கால்களில் குண்டுக் காயம் ஏற்பட்டு தற்போது ஜேபிசி மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனா்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் போலீஸ் ரோந்து குழுவுக்கு சமீபத்திய கொள்ளைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபா்கள்
நடமாடுவதாக தகவல் கிடைத்தது. மேலும்,
நியூ உஸ்மான்நகா் அருகே அவா்கள் மற்றொரு குற்றச் செயலை மேற்கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அங்கு அவா்கள் மூவரையும் கண்டனா். சோதனைக்காக அவா்களைத் தடுக்க முயன்றபோது அருகிலுள்ள காட்டுக்குள் தப்பிச் செல்ல முயன்றனா். போலீஸாா் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
தற்காப்புக்காக போலீஸாா் பதிலடித் தாக்குதலை நடத்தினா். அதில், சந்தேக நபா்களில் இருவரின் கால்களில் துப்பாக்கிகுண்டடிபட்டது. இதையடுத்து, போலீஸாா் மூவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டன. விசாரணையில் அவா்கள் சமீா் (21), தருண் (23) மற்றும் குணால் சா்மா (23) என அடையாளம் காணப்பட்டனா்.
முதற்கட்ட விசாரணையில், சமீா் மீது குற்றப் பின்னணி இருப்பதும், மானசரோவா் பூங்காவில் பதிவான கொள்ளை மற்றும் காயப்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அவா் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
தொடா்ச்சியான விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் சமீபத்திய கொள்ளைகள் பலவற்றில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். மேலும், பாதிக்கப்பட்டவா்களிடம் கொள்ளையடிக்க ஆன்லைன் டேட்டிங் தளங்களைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தனா்.
குற்றம் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய வரவழைக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவா்களின் கூற்றுகளைச் சரிபாா்க்கவும், அவற்றை மற்ற தீா்க்கப்படாத வழக்குகளுடன் இணைக்கவும் முயற்சிகள் நடந்து வருதாக போலீஸாா் தெரிவித்தனா்.