என்ன, 500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா? ஆர்பிஐ அறிவிப்பால் குழப்பம்!
வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஐபிஎல் சீசன் நாளையுடன் நிறைவடைகிறது. அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இதையும் படிக்க: ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?
வேலை இன்னும் முடியவில்லை
இறுதிப்போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்டு அணிக்காக போட்டியை வென்று கொடுப்பது உலகின் மிகவும் சிறந்த உணர்வைத் தரக் கூடியது. மும்பைக்கு எதிரான எனது ஆட்டத்தை, நான் விளையாடியதிலேயே சிறந்த ஆட்டம் எனக் கூறுவேன். இதுபோன்ற சூழல்களில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சேஸிங் செய்யும் இடத்தில் இருந்தால், அணிக்குத் தேவையான ரன் ரேட் எவ்வளவு, ஆடுகளம் எப்படி இருக்கிறது, எந்த பந்துவீச்சாளர்கள் பந்துவீசப் போகிறார்கள் என்பதையெல்லாம் பார்ப்பேன்.
அதன் அடிப்படையில் எனது ஆட்டத்தின் வியூகங்களை வகுத்து விளையாடுவேன். ஆட்டத்தினை இறுதி வரை எடுத்துச் செல்ல முயற்சி செய்வேன். இந்த அத்தனை விஷயங்களும் துல்லியமாக செயல்படுத்தப்பட வேண்டும். என்னுடைய வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை. பாதி மட்டுமே முடிந்துள்ளது. நாளை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.